பாதுகாப்பு துறையில் அக்னிபாத் வீரர்களுக்கு 10% இட ஒதுக்கீடு – அறிவிப்பு வெளியீடு!
மத்திய அரசின் புதிய அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பணிக்கொடை, ஓய்வூதிய பயன்கள் இல்லாமல், வெறும் நான்கு ஆண்டுகள் பணியாற்ற இத்திட்டம் அனுமதிக்கிறது. இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் பணிகளில் 10 சதவீதம் அக்னி வீரர்களுக்கு ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
10% இட ஒதுக்கீடு:
ராணுவப் பணியை 4 ஆண்டுகளாக குறைக்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இத்திட்டத்துக்கு வட இந்திய மாநிலங்களில் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பீகார் மாநிலத்தில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக ரயில்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மேலும் ஹரியானாவில் கல்வீச்சு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பீகாரில் பாஜக அலுவலகமும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வயதுடைய இருபாலரும் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் சேரலாம்.
Exams Daily Mobile App Download
இந்த திட்டத்தின் கீழ், பணியில் சேருவோர் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுபவர். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும். அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருவதால் பல்வேறு சலுகைகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, “ அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவப் படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? கிடைக்கும் நன்மைகள் என்னென்ன!
மத்திய துணை ராணுவ படைகள் மற்றும் அசாம் ரைபிள்களில் ஆட்சேர்ப்புக்காக அக்னி வீரர்களுக்கு வயது வரம்பில் 3 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அக்னி வீரர்களின் முதல் பேட்சுக்கு, நிர்ணயிக்கப்பட்ட உச்ச வயது வரம்பில் 5 ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்படும்.” என்று உள்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாதுகாப்பு துறையில் 10 சதவீதம் அக்னி வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராடி வரும் நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் பணிகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும், இந்திய கடலோரக் காவல் படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம், பாதுகாப்புத் துறையில் உள்ள அனைத்து 16 பொதுத்துறை நிறுவனங்களிலும் இந்த 10% காலியிடங்கள் ஒதுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.