டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு மீண்டும் ஒரு தகுதி தேர்வு – ஆசிரியர்கள் போராட்டம்!
டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு தகுதி தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட வேண்டும் என்கிற அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் அதனை எதிர்த்து ஆசிரியர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆசிரியர்கள் போராட்டம்:
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கட்டாயமாக டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதன்படி கடந்த 2012 ஆம் ஆண்டு வரைக்கும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணியிடம் வழங்கப்பட்டு வந்தது. இதன் பின் கடந்த 2013 ஆம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணியிடங்கள் வழங்கப்படாமல் வெயிட்டேஜ் என்கிற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்குவதற்கு மீண்டும் ஒரு போட்டி தேர்வு நடத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், தற்போது டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நியமன தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களும் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு தகுதி தேர்வு வைக்க வேண்டும் என்கிற அரசாணை முந்தைய ஆட்சியின் போது வெளியிடப்பட்டது. முதல்வர் மு. க. ஸ்டாலின் இதில் கவனம் செலுத்தி 2013 ஆம் ஆண்டு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்த அரசாணையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அனைத்து ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.