
தமிழகத்தில் மே 5-ம் தேதி அனைத்து கடைகள் மூடப்படும்.. வணிகர் சங்க பேரமைப்பு வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!!
வணிகர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்குத் தீர்வுகாண, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆண்டுதோறும் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான 42-வது வணிகர் தின மாநாடு மதுராந்தகத்தில் நடக்கவிருப்பதால் வரும் மே 5-ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “வணிகர் தின மாநில மாநாடு செங்கல்பட்டு அடுத்த மதுராந்தகத்தில் மாலை 3.35 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக சுமார் 29 ஏக்கரில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இம்மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுவார் என்று தெரிவித்துள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான வணிகர்கள் குடும்பத்துடன் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர் எனவும், வணிகளின் நலனைக் காக்கவும், வணிகத்தை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.


























