வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு – வானிலை மையம் முக்கிய எச்சரிக்கை!
இன்று வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளதால் நகரின் பல்வேறு பகுதியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும், இந்த கனமழை அடுத்த ஏழு நாட்களுக்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இந்நிலையில், வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அடுத்த 24 மணி நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தெற்கு ஒடிசா வடக்கு ஆந்திரா நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று அதிக அளவில் வீசும் என்பதனால் மீனவர்கள் இன்று கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதை தவிர்த்துக் கொள்ளும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.