தமிழக அரசு பள்ளிகளில் 10,000 ஆசிரியர் காலியிடங்கள் – அரசின் திட்டம் என்ன?
தமிழக அரசு பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டு தொடங்க உள்ள நிலையில், 10,000 க்கும் அதிகமான ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு நடவடிக்கை:
தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு பணிகள் பள்ளிகள் தொடங்குவதற்கு முன்னதாகவே நடத்தி முடிக்கப்பட்டு விடும். ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் மே மாதத்தில் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்ட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு பணிகள், தற்போது வரை முடிந்த பாடில்லை. பலமுறை நாட்கள் தள்ளிவைக்கப்பட்டு வருகிறது.
தற்போது ஆன்லைன் முறையில் நடந்து வரும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு முழுவதுமாக முடிந்த பின்னர் தான் ஆசிரியர்கள் பணிநிரவல் முடிவடையும். இந்நிலையில், வரும் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், 670 மேல்நிலைப்பள்ளிகள், 435 உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது. இதேபோல், 10,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதால், மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கும் நிலை உள்ளதாக ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.