ரூ.1000 உரிமைத்தொகைக்கு 1.63 கோடி பேர் விண்ணப்பம் – இன்று முதல் களஆய்வு தொடக்கம்!
தமிழகத்தில் ரூ.1000 உரிமைத்தொகைக்கான விண்ணப்ப பதிவு முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில் இன்று முதல் அதிகாரிகளால் வீட்டில் களஆய்வு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1000 உரிமைத்தொகை:
தமிழகத்தில் ரூ. 1000 உரிமைத்தொகை திட்டம் வரும் செப். 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. இந்நிலையில், இரண்டு கட்டங்களாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான முகாம் நடைபெற்ற நிலையில் தற்போது வரையிலும் 1.63 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கின்றன. மேலும், முகாம்களின் மூலமாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய தவறியவர்களுக்காகவும் ஆகஸ்ட் 18 முதல் 20ஆம் தேதி வரையிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில், தற்போது ரூ. 1000 உரிமைத்தொகைக்கான விண்ணப்ப செயல்முறை முழுமையாக முடிவடைந்து இருக்கிறது.
Follow our Instagram for more Latest Updates
இதற்கு அடுத்தபடியாக, குடும்பத் தலைவிகள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தில் ஏதேனும் தவறு அல்லது சந்தேகப்படும்படியாக இருந்தால் குடும்ப தலைவிகளின் வீட்டிற்கு அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்ள வருவார்கள் எனவும், அதிகாரிகள் வருவதற்கு முன்பாகவே குடும்பத் தலைவிகளின் மொபைல் எண்ணுக்கு தெரியப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ரூ. 1000 உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பது குறித்த தகவலும் குடும்ப தலைவிகளின் மொபைல் எண்ணுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு வேளை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், இது தொடர்பாக குடும்பத் தலைவிகளுக்கு மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, குடும்பத் தலைவிகள் மேல்முறையீடு செய்யும் போதும் அதிகாரிகள் கட்டாயமாக வீட்டிற்கு கள ஆய்வு மேற்கொள்வார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.