
உதகையில் நடைபெற்ற ஆளுநர் மாநாடு.. புறக்கணித்த அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள்.. வெளியான முக்கிய தகவல்..!!
தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரம், மாநில அரசுக்கு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் துணைவேந்தர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்நிலையில் “நீலகிரி மாவட்டம், உதகையில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தலைமையில் ஏப்ரல் 25 மற்றும் 26 ஆகிய 2 நாட்களும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும்” என்று ஆளுநர் R.N.ரவி அறிவித்திருந்தார்.
இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த மாநாட்டை தமிழக அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணித்துள்ளனர். மேலும், “41 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 9 பேர் மட்டும் பங்கேற்றுள்ளனர். அந்த 9 பேரும் ஒன்றிய அரசின் பல்கலைக்கழக மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஆவர்” என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து, ஆளுநரின் இந்த மாநாட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.























