மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு தரப்பில் இருந்து வந்த எஸ் எம் எஸ் ஷாக் அளித்துள்ளது.
உரிமைத்தொகை:
தமிழக அரசு 2023 செப்டம்பர் 15ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு மாதம் தோறும் வங்கி கணக்கில் நேரடியாக ரூபாய் ஆயிரம் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மாதம் தோறும் 15ஆம் தேதி உரிமைத்தொகை கணக்கில் ஏற்றப்பட்டவுடன் முதல்வரின் பெயரில் பெண்களுக்கு உரிமைத்தொகை திட்டம் குறித்த எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்படும். ஆனால் நடப்பு மாதம் உரிமைத்தொகை திட்டத்தின் பயனாளிகள் அனைவருக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரில் வீடியோ உடன் கூடிய எஸ்எம்எஸ் வந்துள்ளது.
இதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் பிப்ரவரி மாத தொகை உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மாதம் தோறும் இது தொடரும் இத்தொகையினை அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தி பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் கைவசம் இருந்த சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறைக்கு தற்போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதனால் தான் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் எஸ் எம் எஸ் உதயநிதி பெயரில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.