டிச.27 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
சிதம்பரம் நடராஜர் கோவிலில் டிசம்பர் 27 ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழா நடைபெற இருப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி விடுமுறை:
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். அதிலும், குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்திப்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா மிக விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு ஆருத்ரா தரிசன விழா சிதம்பரம் நடராஜர் கோவிலில் டிசம்பர் 27 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.
இதனால், டிசம்பர் 27 ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுகட்டும் விதமாக ஜனவரி 6 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 27 ஆம் தேதி குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களை கொண்டு அரசு நிறுவனம் இயங்கும்.