TNPSC Tamil Ilakkanam Santhipilaiyai Nikkuthal Study Metrials – Free PDF Download
TNPSC தமிழ் தகுதித்தேர்வு – சந்திப்பிழையை நீக்குதல்:
சந்திப்பிழை என்பது ஒரு சொல்லின் விகுதியோடு மற்றொரு சொல் சேரும் போது ஏற்படும் மாற்றங்களில் உருவாகும் பிழை ஆகும். மேலும், வல்லின எழுத்துக்களாகிய க, ச, த, ப மிகும் இடங்களில் மிகாமலும், மிகாத இடங்களில் மிகுந்தும் எழுதுவது சந்திப்பிழை எனப்படுகிறது. மேலும், நாம் எழுதும் போது பொதுவாக அதிகம் செய்யும் பிழை சந்திப்பிழையே ஆகும். எடுத்துக்காட்டாக, “கத்தி கொண்டு வந்தான் – கத்திக்கொண்டு வந்தான்” மேற்கண்ட தொடரில் வல்லினம் மிகும்போது ஒரு பொருளும், மிகாதபோது வேறொரு பொருளும் வருவதை அறியலாம். எனவே, உங்களுக்காக சந்திப்பிழை குறித்த தகவல்களை கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.
வல்லின எழுத்துக்கள் என்றால் என்ன ?
தமிழ் மொழியில் உள்ள உயிரெழுத்துக்கள் 12 மற்றும் மெய்யெழுத்துக்கள் 18-ம் ‘முதலெழுத்துக்கள்’ என அழைக்கப்படுகின்றன. இதில், இந்த பதினெட்டு மெய்யெழுத்துக்களும் வல்லினம், மெல்லினம் மற்றும் இடையினம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில், ‘க, ச, ட, த, ப, ற’ என்னும் ஆறு எழுத்துக்களும் வல்லின எழுத்துக்கள் ஆகும். மேலும், இந்த வல்லின எழுத்துக்களை வல்லெழுத்துக்கள் எனவும் அழைப்பவர்.
வல்லினம் மிகும் இடங்கள்:
வல்லின எழுத்துக்கள் ‘க, ச, ட, த, ப, ற’ ஆகும். இதில், வல்லின எழுத்துக்களாகிய க, ச, த, ப , சில சொற்களின் பின் மிகுந்து வருவது ‘வல்லினம் மிகும் இடங்கள்’ எனப்படுகிறது. மேலும், ட, ற ஆகிய வல்லின எழுத்துக்களோ அவற்றின் குடும்பத்தை சேர்ந்த டா, றா, டி, றி போன்ற எழுத்துக்களோ சொல்லின் தொடக்கத்தில் வராது. ஆகவே, இவற்றில் வல்லினம் மிக வாய்ப்பு இல்லை. மேலும், பின்வருவனவற்றில் வல்லினம் மிகும் இடங்கள் குறித்து விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.
| விளக்கங்கள் |
எடுத்துக்காட்டுகள் |
| அ, இ என்னும் சுட்டெழுத்துக்களுக்குப் பின்னும், அந்த, இந்த என்னும் சுட்டெழுத்துக்களுக்குப் பின்னும், எ என்னும் வினா எழுத்தின் பின்னும், எந்த என்னும் வினாச் சொல்லின் பின்னும் வல்லினம் மிகும். | அச்சட்டை
இந்தக்காலம் எத்திசை ? எந்தப் பணம் ? |
| ‘ஐ’ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகும். | கதவைத்திற
தகவல்களைத்திரட்டு காட்சியைப் பார் |
| ‘கு’ என்னும் நான்காம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகும். | முதியவருக்குக் கொடு
மொட்டுக்குப்பாட்டு ஊருக்குச்செல் |
| என, ஆக போன்ற சொல்லுருபுகளின் பின் வல்லினம் மிகும். | எனக் கேட்டார்
வருவதாகக் கூறு |
| அதற்கு, இதற்கு, எதற்கு என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும். | அதற்குச் சொன்னேன்
இதற்குக் கொடு எதற்குக் கேட்கிறாய் ? |
| இனி, தனி ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகும் | இனிக் காண்போம்
தனிச் சிறப்பு |
| மிக என்னும் சொல்லின் பின் வல்லினம் மிகும். | மிகப் பெரியவர் |
| எட்டு, பத்து என்னும் எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகும் | எட்டுத்தொகை
பத்துப்பாட்டு |
| ஓரெழுத்து ஒரு மொழிக்கு பின் வல்லினம் மிகும் | தீப் பிடித்தது
பூப் பந்தல் |
| ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும் | கூவாக் குயில்
ஓடாக் குதிரை |
| வன்தொடர் குற்றியலுகரங்கள் நிலை மொழியாக இருந்து புணர்கையில் வல்லினம் மிகும் | கேட்டுக் கொண்டான்
விட்டுச் சென்றான் |
| அகர, இகர, ஈற்று வினையெச்சங்களுடன் புணர்கையில் வல்லினம் மிகும் | ஆடச் சொன்னார்
ஓடிப் போனார் |
| ஆறாம் வேற்றுமை தொகையில் வல்லினம் மிகும் | புலித் தோல் |
| திசை பெயர்களின் பின் வல்லினம் மிகும் | கிழக்குப் பகுதி
வடக்குப் பக்கம் |
| இரு பெயரொட்டு பண்பு தொகையில் வல்லினம் மிகும் | மல்லிகைப் பூ
சித்திரைத் திங்கள் |
| உவமை தொகையில் வல்லினம் மிகும் | தாமரைப்பாதம் |
| சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும் | சாலப் பேசினார்
தவச் சிறந்தது |
| தனிக் குற்றெழுத்தை அடுத்துவரும் ஆகார எழுத்தின் பின் வல்லினம் மிகும் | நிலாச் சோறு
கனாக் கண்டேன் |
| சில உருவகச் சொற்களின் பின் வல்லினம் மிகும் | வாழ்க்கைப்படகு
உலகப்பந்து |
வல்லினம் மிகா இடங்கள்:
வல்லின எழுத்துக்களாகிய க, ச, த, ப , சில சொற்களின் பின் சில காரணங்களால் மிகாது. அவை “வல்லினம் மிகா இடங்கள்” எனப்படுகிறது. பின்வருவனவற்றில் வல்லினம் மிகா இடங்கள் எவை என்பதை பற்றி விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.
| அது, இது என்னும் சுட்டு பெயர்களின் பின் வல்லினம் மிகாது. | அது செய்
இது காண் |
| இவ்வினாப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது. | எது கண்டாய் ?
எவை தவறுகள் ? |
| எழுவாய் தொடரில் வல்லினம் மிகாது. | குதிரை தாண்டியது
கிளி பேசும் |
| மூன்றாம், ஆறாம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகாது. | அண்ணனோடு போ
எனது சட்டை |
| விளித் தொடர்களில் வல்லினம் மிகாது. | தந்தையே பாருங்கள்
மகளே தா |
| பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது. | வந்த சிரிப்பு
பார்த்த பையன் |
| இரண்டாம் வேற்றுமை தொகையில் வல்லினம் மிகாது. | நாடு கண்டான்
கூடு கட்டு |
| படி என்று முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது | வரும்படி சொன்னார்
பெறும்படி கூறினார் |
| வியங்கோள் வினைமுற்று தொடரில் வல்லினம் மிகாது. | வாழ்க தமிழ்
வருக தலைவா ! |
| வினைத்தொகையில் வல்லினம் மிகாது. | குடிதண்ணீர்
வளர்பிறை திருவளர்செல்வன் |
| எட்டு, பத்து தவிர பிற எண்ணு பெயர்களுடன் புணரும் வல்லினம் மிகாது. | ஒரு புத்தகம்
மூன்று கோடி |
| உம்மை தொகையில் வல்லினம் மிகாது. | தாய்தந்தை
இரவுபகல் |
| அன்று, இன்று, என்று, ஆவது, அடா, அடி ,போன்ற என்னும் சொற்களுக்கு பின் வல்லினம் மிகாது. | அன்று சொன்னார்
என்று தருவார் அவராவது தருவதாவது யாரடா சொல் ஏனடி செல்கிறாய் ? கம்பரை போன்ற கவிஞர் யார் ? |
| அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு, அத்தனை, இத்தனை, எத்தனை, அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு, அத்தகைய, இத்தகைய, எத்தகைய, அப்போதைய, இப்போதைய, எப்போதைய, அப்படிப்பட்ட, இப்படிப்பட்ட, எப்படிப்பட்ட, நேற்றைய, இன்றைய, நாளைய ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகாது. | அவ்வளவு பெரியது
அத்தனை சிறியது அவ்வாறு பேசினான் அத்தகைய பாடங்கள் அப்போதைய பேச்சு அப்படிப்பட்ட காட்சி நேற்றைய சண்டை |
| மூன்று, ஐந்து, ஆறாம் வேற்றுமை தொடர்களில் வல்லினம் மிகாது. | என்னோடு சேர்
மரத்திலிருந்து பறி குரங்கினது குட்டி |
| இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் வேற்றுமை தொடர்களில் வல்லினம் மிகாது. | தமிழ் படி (ஐ)
கை தட்டு (ஆல்) வீடு சென்றாள் (கு) கரை பாய்ந்தான் (இருந்து) |
| நிலைமொழி உயர்திணையாய் அமையும் தொடரில் வல்லினம் மிகாது. | தலைவி கூற்று
தொண்டர் படை |
| சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களை தவிர ஏனைய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது. | உறு பொருள்
நனி தின்றான் கடி காவல் |
| அடுக்கு தொடர், இரட்டை கிளவி ஆகியவற்றில் வல்லினம் மிகாது. | பார் பார்
சலசல |
| கள் என்னும் அஃறிணை பன்மை விகுதி சேரும்போது வல்லினம் மிகாது (மிகும் என்பர் சிலர்) | கருத்துகள்
பொருள்கள் வாழ்த்துகள் |
| ஐகார வரிசை உயிர்மெய் ஓரெழுத்து சொற்களாய் வர, அவற்றோடு கள் விகுதி சேரும்போது வல்லினம் மிகாது. | பைகள்
கைகள் |
சந்திப்பிழை எடுத்துக்காட்டுகள்:
- பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாப்பது நம் கடமை.
- வள்ளைப் பாட்டின் சிறப்புக் கேற்ப முழவை முழங்குகிறது.
- வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப் போகிறது.
- அந்தப் பையன் சொன்ன செய்தி நல்லது.
- முரட்டுக் காளையைப் பிடித்து அடக்கினான்.
- தண்டுக் கீரையைப் பறித்தேன்.
- விடையைத் தேடிப் பார்க்கக் கடினமாக இருந்தது.
- அந்தச் சிறுவன் எங்கு சென்றான் ?
- தலைவி தலைவனோடு சென்றாள்.
- சிற்பக்கலைக் கூடமாக திகழ்கிறது.
- கண்காணிப்புக் கருவி அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது.
- இந்தப் பூமியின் ஒவ்வொரு துகளும் எம்மக்களுக்குப் புனிதமானதாகும்.
- குழலிக்குப் பாடத் தெரியும்.
- கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குருகத்தறித்த குறள்.
- போர்க் கோலம் பூண்டு வந்த பரதனது சேனையைக் கண்ட குகன், இராமனை வெல்லக் கருதி வந்தான் என்று எண்ணினான்.
- தமிழில் வரலாற்றுக் கருத்துக்களையும் பண்பாட்டுக் கூறுகளையும் காண முடியும்.
- புத்தகப் படிப்புத் தேவை அத்தோடு பட்டறிவைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- ஏழைகளுக்குப் பொருள் பெறாமல் வாதாடி நீதி பெற்றுத் தந்தார்.
- மாறன் பத்தாம் வகுப்புப் படிக்கிறான்.
- திரைப்படம் மக்களைத் தன்பால் ஈர்த்துக் கட்டிப் போடவல்லது.
- கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்.
- கயிற்றுக் கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்.
- திரையரங்குகளில் திரைப்படம் காட்ட ஒளி ஒலிப் படக்கருவி பயன்படுகிறது.
- சங்க காலத்தில இசைத்தமிழ் சீரும் சிறப்பு பெற்றுத் திகழ்ந்தது.
- எட்டுத்தொகையுள் பதிற்றுப்பத்துச் சுவடியும் ஒன்று.
- மருத்துவப்படிப்பிற்கு என்னைத் தேர்வு செய்தனர்.


























