
உக்ரைனில் தற்காலிக நிர்வாகத்தை உருவாக்க வேண்டும்…!! அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ரஷ்யா அதிபர் யோசனை
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று, அந்நாட்டின் அதிபராக பதவியேற்றார். அதன்பின், உக்ரைனில் அதிபர் தேர்தல் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என திட்டமிடப்பட்டது. ஆனால், கடந்த 2022 ஆம் ஆண்டில் இருந்து ரஷ்யா உடன் தொடர்ந்து போர் நடைபெற்று வருவதால், தற்போது வரை அங்கு அதிபர் தேர்தல் நடைபெறவில்லை.
மேலும், ரஷ்யா அந்நாட்டை ஆக்கிரமித்ததில் இருந்து உக்ரைனில் ராணுவ சட்டம் அமலாகி வருவதால், அதிபர் தேர்தல் நடைபெறுவதை அந்நாட்டு சட்டம் மறுக்கிறது. மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “உக்ரைனில் அதிபர் தேர்தல் நடைபெறாததற்கு கண்டனம் தெரிவிப்பதாக” சமீபத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில், “உக்ரைனில் அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு முன் தற்காலிக நிர்வாகத்தை உருவாக்க வேண்டும்” என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், “அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு உக்ரைனில் அதிபர் தேர்தலை விரைவில் நடத்துவது குறித்த யோசனை வழங்குவதாகவும்” தெரிவித்துள்ளார்.

























