வேகமெடுக்கும் ‘நோரோ வைரஸ்’ .. அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கை.. எச்சரிக்கை விடுத்த இங்கிலாந்து அரசு!
இங்கிலாந்து நாட்டில் புதிய வகை நோரோ எனும் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரி முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
நோரோ வைரஸ்:
உலக நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்தே இன்னும் மீண்டு வரவில்லை. தற்போது தான் ஓரளவுக்கு பாதிப்புகள் குறைந்த வண்ணம் உள்ளது. அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நோரா என்னும் புதிய வகை வைரஸ் இங்கிலாந்தில் அதிக அளவில் பரவி மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் உணவு பொருட்கள் மற்றும் குடிநீர் வழியாக எளிதாக பரவும் என உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கடும் வயிற்றுப்போக்கு, வாந்தி, தலைவலி உள்ளிட்ட உடல்நல கோளாறுகள் ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது இந்த நோரோ வைரஸ் இங்கிலாந்து நாட்டில் அதிக அளவில் பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 371 பேர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த எண்ணிக்கை கடந்த வாரத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலை தொடர்ந்தால் மருத்துவமனைகள் நிரம்பும் அபாயம் உள்ளதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நோரோ வைரஸ் வயதானவர்களையும், குழந்தைகளையும் அதிகம் பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.