
கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் திட்டம்…ஊரக வளர்ச்சி துறை செயலாளர் வெளியிட்ட அதிரடி அரசாணை
தமிழ்நாட்டில் கிராமங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, கடந்த 2006 ஆம் ஆண்டு “அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்” தொடங்கப்பட்டது. இதையடுத்து, 2025 -2026 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “இந்த அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் -2 ன் கீழ் தமிழ்நாட்டில் சுமார் 2,329 கிராமங்களில் ரூ. 1,087 கோடி நிதியில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்” என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, “இத்திட்டத்தின் கீழ் 2,329 கிராமங்களில் குளங்கள், ஊரணிகள் புணரமைப்பு, நூலக வசதிகள், பொது பயன்பாட்டு கட்டிடங்கள், சமத்துவ சுடுகாடுகள், இடுகாடுகளை மேம்படுத்துதல், தெருக்கள், வீதிகள் மேம்பாடு, தெருவிளக்குகள், சாலைகள் மற்றும் சந்தைப்படுத்தும் வசதிகள் ஆகிய பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக” தெரிவித்துள்ளார். மேலும், “இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட குழு ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.























