
12 ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் விண்ணப்பிக்கும் திட்டம் ரத்து.. தேர்வு துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
தமிழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று (08-05-2025) வெளியானது. இத்தேர்வை எழுதிய மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 95.03% எனவும், வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, 12 ஆம் வகுப்பு மார்க் ஷீட் வழங்குவது பற்றி பேசிய பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், “12 ஆம் வகுப்பு மாணவர்கள் வரும் மே 12 ஆம் தேதி முதல் மதிப்பெண்கள் பட்டியலை தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்” என அறிவித்தார். இந்நிலையில் பொதுத்தேர்வுகளுக்கான மறுகூட்டல் பற்றி தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, “12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளுக்குப் பிறகு நேரடியாக மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், விடைத்தாள் நகல் பெற்ற பிறகே மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்கும் திட்டம் தொடர்கிறது என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மேலும், விடைத்தாள் நகல் பெற்ற பிறகு முடிவெடுப்பது மாணவர்களுக்கு சரியான தீர்வாக இருக்கும் என்பதால் தேர்வுத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது”.

























