இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, அமெரிக்க சுதந்திரத்தின் 247வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் போது ஹைதராபாத்தில் அமெரிக்க தூதரகத்தை மே 26 அன்று திறந்து வைத்துள்ளார்.
அமெரிக்கா ஹைதராபாத் நகரத்தை மதிக்கிறது என்றும் தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகியவை அமெரிக்க-இந்திய வியூகக் கூட்டாண்மையின் மிக முக்கியமான அத்தியாயங்களில் ஒன்றாக அமைந்துள்ளதால் $340 மில்லியன் மதிப்பிலான இந்த தூதகரத்தை திறந்து வைத்துள்ளோம் என அமெரிக்கா தூதர் தெரிவித்துள்ளார்.
ப்ராஜெக்ட் சீட்டா திட்டத்தின் கீழ் NTCA ஆனது “சிவிங்கி புலி திட்ட வழிநடத்தல் குழுவை” உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் லட்சிய சிவிங்கி புலி திட்டத்தை மேற்பார்வையிடவும் கண்காணிக்கவும் தேசிய மற்றும் சர்வதேச வல்லுநர்கள் அடங்கிய புதிய வழிநடத்தல் குழுவை மத்திய அரசானது நியமித்துள்ளது.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தால் (NTCA) அமைக்கப்பட்ட, சிவிங்கி புலி திட்ட வழிநடத்தல் குழுவானது, மத்திய பிரதேச வனத்துறைக்கு “சிவிங்கி புலி குறித்து மதிப்பாய்வு, கண்காணித்தல் மற்றும் ஆலோசனைகளை வழங்கும்” என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி ஆயோக்கின் 8வது ஆட்சிக்குழு கூட்டமானது பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றுள்ளது.
இந்தியாவை பல்வேறு துறைகளில் மேம்பட்ட நாடாக மாற்ற நிதி ஆயோக்கின் 8வது ஆட்சிக்குழு கூட்டமானது பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் மே 27 அன்று நடைபெற்றுள்ளது.
2047ஆம் ஆண்டுக்குள் “இந்தியாவை வளர்ந்த மற்றும் மேம்பட்ட நாடாக மாற்றும் நோக்கத்துடன், திறன் மேம்பாடு, சுகாதாரம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மாநில செய்திகள்
தமிழகம் மற்றும் ஜப்பான் இடையே கூட்டுறவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழக அரசின் செங்கல்பட்டு மாவட்டத்தில் “டெய்சல் ஆட்டோ ஏர்பேக் இன்ஃப்ளேட்டர் வசதியை விரிவாக்கம் செய்வதற்காக கூட்டுறவு ஒப்பந்தத்தில் ஜப்பானின் ஒசாகாவில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார்.
ஒசாகாவிலிருந்து தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், 2024 ஜனவரியில் சென்னையில் நடைபெற உள்ள “உலகளாவிய முதலீட்டாளர்களின் மாநாட்டிற்கு” பல நாட்டு நிறுவனங்களின் தலைவர்களை அழைக்கவும் ஜப்பான் சென்றிருந்த நிலையில் இந்த ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நியமனங்கள்
ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி COP28 க்கான ஐ நாவின் ஆலோசனைக் குழுவில் இணைந்துள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான முகேஷ் அம்பானி, ஐக்கிய நாடுகளின்(UN) காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின் (UNFCCC) 28வது அமர்வின் “தலைவரின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக” நியமிக்கப்பட்டுள்ளார்.
COP28 இன் தலைவரின் ஆலோசனைக் குழுவில், சுனிதா நரேன், முகேஷ் அம்பானி ஆகிய இருவரும் இந்தியர் என்பது இதில் குறிப்பிடத்தக்கதாகும்.
GERA டெவலப்மென்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக குல்சார் மல்ஹோத்ரா நியமனம்.
புனேவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனமான ஜெரா டெவலப்மென்ட், அதன் தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) குல்சார் மல்ஹோத்ராவை மே 26 அன்று நியமித்துள்ளது.
இந்த நிறுவனமானது தனது 52 ஆண்டுகால வரலாற்றில், நிறுவனத்தின் செயல்பாடுகளை மேற்ப்பார்வையிடுவதற்கு ஒரு தொழில்முறை தலைமை நிர்வாக அதிகாரியை நியமித்திருப்பது இதுவே முதல்முறை என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஐந்து நீதிபதிகள் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளாக உயர்வு.
மும்பை உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்கபூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், நீதிபதி ரமேஷ் டி தனுகா பம்பாய் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் மத்திய சட்ட அமைச்சகம் நியமித்துள்ளது.
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், நீதிபதி மமிதான சத்ய ரத்னா ஸ்ரீ ராமச்சந்திர ராவ் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், நீதிபதி சரசா வெங்கடநாராயணா கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொல்லியல் ஆய்வுகள்
வணிகர் குழு கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மதுரை பாப்பாக்குடிஅருகே ஆண்டார் கொட்டாரம் பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றில் 800 ஆண்டுகளுக்கு முந்தைய “வணிகர்குழு கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது”.
இக்கல்வெட்டை அவ்வூர் மக்கள் “முனியன் கல்” என்று அழைக்கின்றனர். இதில் உள்ள 47 வரிகளில் முதல் 6 வரிகள் “கிரந்த எழுத்துக்களில் சமஸ்கிருதத்தில் வணிகர்களின் மெய்க்கீர்த்தியை கூறியுள்ளது”. ‘சமஸ்த புவனா சார்ய பஞ்ச சதவீரசாசனம்’ என இது குறிப்பிடுகிறது. அதாவது “ஐநுாற்றுவா்” என்னும் வணிகக்குழுவினர் அளித்த சாசனம் என்பது இதன் பொருள் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய தினம்
உலக பசி தினம் 2023
உலகம் முழுவதும் மக்கள் பசியால் வாடுவதை தவிர்க்கவும் , உணவுகளை வீணாக்காமல் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலக பசி தினமானது ஒவ்வொரு ஆண்டும் மே 28 அன்று உலகளவில் அனுசரிக்கப்படுகிறது.
குறைந்த வருமானம், வறட்சி, பஞ்சம் மற்றும் அரசியல் நெருக்கடிகள் உட்பட உலகம் முழுவதும் பசிக்கு பல காரணங்கள் உள்ள நிலையில் அவற்றை மக்களிடையே இருந்து அகற்ற “தி ஹங்கர் ப்ராஜெக்ட்” என்ற திட்டமானது உலகம் முழுவதும் பல்வேறு முயற்சிகளை செயல்பட்டு வருகிறது.