ஆகமக் கோயில்கள் அறிக்கை: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அறநிலையத் துறை அழைப்பு
தமிழகத்தில் ஆகம விதிகளின்படி அமைந்துள்ள கோயில்களை கண்டறிவது தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என இந்து சமய அறநிலையத் துறை அழைப்பு விடுத்துள்ளது.
ஆகமக் கோயில்களை அடையாளம் காண அமைக்கப்பட்ட நிபுணர் குழு, முதற்கட்டமாக 34,971 கோயில்கள் தொடர்பான விவரங்களை ஆய்வு செய்துள்ளது.
இந்த விவரங்களில் ஏதேனும் விடுபாடுகள் அல்லது கூடுதல் தகவல்கள் இருந்தால், பொதுமக்கள் தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம். அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இணையதளம் அல்லது தபால் மூலம் கருத்துகளை அனுப்பலாம் என அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் உள்ள ஆகமக் கோயில்கள் தொடர்பான விவரங்களை முழுமையாக தொகுத்து இறுதி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.



























