
1 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் டெல்லி முதலமைச்சர்.. இனி நம் மாநிலம் நம்பிக்கையின் நகரமாக மாறும் என பெருமிதம்..
கடந்த மாதம் டெல்லி மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில், எம்.எல்.ஏ. ரேகா குப்தா டெல்லி மாநில முதல்வராக பதவி ஏற்றார். மேலும், நிதித்துறையை நிர்வாகம் செய்யும் ரேகா குப்தா இன்று (25-03-2025) சட்டசபையில் டெல்லிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கியம்சங்கள் பற்றிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, 26 வருடத்திற்குப் பிறகு டெல்லி சட்டமன்றத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிலான பட்ஜெட்டை பாஜக அரசு தாக்கல் செய்துள்ளது. மேலும், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா பெண்களுக்கு அதிகாரமளித்தல், கட்டமைப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த “பட்ஜெட்டில் டெல்லியின் கட்டமைப்பை மேம்படுத்த மூலதன செலவு ரூ.28 ஆயிரம் கோடியும், காற்று மாசுவை கட்டுப்படுத்துவதற்காக ரூ.300 கோடியும், யமுனை நதியை சுத்தம் செய்ய ரூ.500 கோடியும் மற்றும் சுத்தமான குடிநீர் மற்றும் துப்புரவு தொடர்பான திட்டங்களுக்கு ரூ.9 ஆயிரம் கோடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளின் ஒதுக்கீடு பட்டியலையும் வெளியிட்டார்”. இதை தொடர்ந்து, பேசிய ரேகா குப்தா அவர்கள் “இது வெறும் பட்ஜெட் மட்டுமல்ல, டெல்லியின் எதிர்காலத்திற்கான தொலைநோக்கு பார்வையை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட்டின் இலக்குகளை நிர்ணயித்துள்ளோம் என்றும், இப்போது டெல்லி வெற்றி வாக்குறுதிகள் கொண்ட மாநிலமாக இல்லாமல் நம்பிக்கையின் நகரமாக மாறவிருக்கிறது என்று தெரிவித்தார்”.























