தமிழகத்தில் மேலும் 4 கலை கல்லூரிகள் திறக்கப்படும்…!! முதல்வர் அறிவிப்பு…!!
இந்தியாவில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. மேலும், உயர்கல்வியை மாணவர்கள் எவ்வித தடையுமின்றி தொடர வேண்டும் என்பதற்காகவே தமிழக அரசானது புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம், உயர்கல்வியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த மே 26 ஆம் தேதி இந்தாண்டு முதல் செயல்படும் வகையில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் 11 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் இக்கல்வியாண்டு முதல் கூடுதலாக 4 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், இவை வேலூர் மாவட்டம் – கே.வி. குப்பம், திருச்சி மாவட்டம் – துறையூர் , கள்ளக்குறிச்சி மாவட்டம் – உளுந்தூர் பேட்டை, திருவண்ணாமலை மாவட்டம் – செங்கம் பகுதியில் அமையவுள்ளது. இக்கல்லூரிகள் மூலம் 1120 மாணவர்கள் பயன் அடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.


























