TN Budget 2021 Live Updates – தமிழக அரசின் இ-பட்ஜெட் தாக்கல்!
தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று கலைவாணர் அரங்கில் தாக்கல் செய்துள்ளார். திமுக அரசு தலைமையேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று முதல் செப்.21ம் தேதி நடைபெற உள்ளது. பட்ஜெட் மீதான விவாதம் ஆகஸ்ட் 16 முதல் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இ-பட்ஜெட் தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்…!
9.50 AM – சட்டப்பேரவைக்கு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வருகை. இன்னும் சற்றுநேரத்தில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
10.00 AM – தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது.
10.05 AM – சட்டமன்ற உறுப்பினர்கள் மேஜையில் உள்ள கையடக்க கணினியில் PDF வடிவில் பட்ஜெட் உள்ளது.
10.10 AM – நிதியமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்து தனது உரையை தொடங்கினார்.
10.12 AM – அதிமுக உறுப்பினர்கள் பேச வாய்ப்பளிக்க படாத காரணத்தால் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
நிதியமைச்சரின் உரை:
- திருத்திய வரவு செலவு அறிக்கை இந்த நிதியாண்டில் எஞ்சிய 6 மாதங்களுக்கும் பொருந்தும்.
- தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக நிறைவேற்றுவோம். ரேஷன் அட்டைதாரர்களுக்கு தேர்தல் வாக்குறுதியின் படி ரூ.4000 வழங்கப்பட்டு உள்ளது.
- வேளாண்துறைக்கான தனி பட்ஜெட் நாளை (ஆகஸ்ட் 14) தாக்கல் செய்யப்படும்.
- 6 மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் திருத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது.
- வரிமுறையை சரிசெய்வதற்காக சட்ட, பொருளாதார வல்லுநர்களை கொண்ட குழு அமைக்கப்படும். தமிழக நிதிநிலை சிக்கல்களை சரிசெய்ய 3 ஆண்டுகள் ஆகும்.
- பொது விநியோக திட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை அமல்படுத்தப்படும் என உறுதி. 2.05 லட்சம் ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது தணிக்கையில் கண்டறியப்பட்டு உள்ளது.
- பொது நிலங்களை முறையாக பயன்படுத்த ‘அரசு நில மேலாண்மை அமைப்பு’ அமைக்கப்படும்.
- 1921 ஆம் ஆண்டு முதலான சட்டமன்ற ஆவணங்கள் கணினிமயமாக்கப்படும்.
- வெளிப்படைத்தன்மை, சமூக ஈடுபாடு, வல்லுநர்கள் கருத்து மற்றும் உறுதியான நடவடிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் அரசு செயல்படும்.
- அரசு நிதி சார்ந்த வழக்குகளை கையாள ‘வழக்கு இடர் மேலாண்மை அமைப்பு’ உருவாக்கப்படும்.
- ஆண்டுதோறும் ஜூன் 3ல் கருணாநிதி செம்மொழித்தமிழ் விருதும் ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
- தமிழை அனைத்து துறைகளிலும் தமிழை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை. தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.80 கோடி, தொல்லியல் துறைக்கு ரூ.29 கோடி நிதி ஒதுக்கீடு.
- தமிழக காவல்துறைக்கு மொத்தம் ரூ.8,930.20 கோடி நிதி ஒதுக்கீடு. காவல்துறையில் 14,317 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
- நீதித்துறைக்கு ரூ.1,713.30 கோடி நிதி ஒதுக்கீடு
- பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவு மானியத்திற்கான ஒதுக்கீடு ரூ.8,437.57 கோடியாக உயர்வு. புதிய ரேஷன் கடைகள் அமைக்கப்படும்.
- நியாய விலைக்கடைகளில் சமையல் எண்ணெய், பருப்பு இந்த ஆண்டும் தொடர்ந்து வழங்கப்படும்.
- தீயணைப்புத் துறைக்கு ரூ.405.13 கோடி நிதி ஒதுக்கீடு.
- நீர்ப்பாசன திட்டங்களுக்கு ரூ.6,607.17 கோடி நிதி ஒதுக்கீடு.
- புதிதாக 6 இடங்களில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்க ரூ.6.25 கோடி செலவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
- சாலை பாதுகாப்புக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.
- அடுத்த 10 ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும்.
- மீன்வளத்துறைக்கு ரூ.1,149.79 கோடி நிதி ஒதுக்கீடு.
- ரூ.500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் உருவாக்கப்படும்.
- 200 குளங்களின் தரம் உயர்த்த ரூ.111.24 கோடி நிதி ஒதுக்கீடு.
- 2,89,877 வீடுகள் கட்ட ரூ.8,017.41 கோடி நிதி ஒதுக்கீடு. ஜல்ஜீவன் இயக்கம் மூலம் வீட்டுக்குடிநீர் இணைப்பு திட்டத்திற்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- அடுத்த 5 ஆண்டுகளில் 8,03,924 குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடு கிடைப்பது உறுதி செய்யப்படும்.
- அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துக்கு ரூ.1,200 கோடி ஒதுக்கீடு. ஊரக வேலை உறுதித்திட்ட பணிநாட்களை 100 இல் இருந்து 150 நாட்களாக உயர்த்த வலியுறுத்தப்படும்.
- கிராமப் புறங்களில் தூய்மை பாரத இயக்கத்தை செயல்படுத்த ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு.
- சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5,500 கோடி சிறப்பு கோவிட் கடன் உட்பட ரூ.20 ஆயிரம் கோடி உறுதி செய்யப்படும்.
- அனைத்து நகரங்களிலும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் நடைபாதைகள் உருவாக்கப்படும்.
- சென்னையில் 3 இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்ட ரூ.500 கோடி ஒதுக்கீடு. கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.1,000 கோடி, சீர்மிகு நகரங்கள் திட்டத்திற்கு ரூ.2,350 கோடி, அம்ருத் திட்டத்திற்கு ரூ.1,450 கோடி நிதி ஒதுக்கீடு.
- நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.5,421.41 கோடி நிதி ஒதுக்கீடு.
- MLA தொகுதி மேம்பாட்டு திட்டத்திற்கு மீண்டும் ரூ.3 கோடி வழங்கப்படும்.
- பேருந்தில் மகளிர் இலவசமாக பயணிக்க ரூ.750 கோடி டீசல் மானியம். புதிதாக பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி நிதி ஒதுக்கீடு.
- மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைக்க விரிவான அறிக்கை தயார்.
- பள்ளிக்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் விதமாக ரூ.32,599.54 கோடி நிதி ஒதுக்கீடு.
- 413 கல்வி ஒன்றியங்களுக்கு தலா 40 தொடுதிரை கையடக்க கணினிகள் ரூ.13.22 கோடியில் வழங்கப்படும். அடிப்படை கல்வியறிவு, கணித அறிவை உறுதி செய்ய ரூ.66.70 கோடியில் எண்ணும் எழுத்தும் இயக்கம்.
- அரசுப்பள்ளி மாணவர்களின் கணினி திறனை உறுதி செய்ய ரூ.114.18 கோடியில் நடுநிலைப் பள்ளிகளில் ஆய்வகங்கள் உருவாக்கப்படும்.
- நமக்கு நாமே – முதலமைச்சரின் சிறப்பு விருதுக்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு.
- நடப்பாண்டில் தமிழகத்தில் புதிதாக 10 கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.
- அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழ்நாடு ஆளில்லா விமான கழகம் உருவாக்கப்படும்.
- உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369.09 கோடி நிதி ஒதுக்கீடு. 25 கலை, அறிவியல் கல்லூரிகள் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
- டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்திற்கு ரூ.959.20 நிதி ஒதுக்கீடு.
- இலவச ஆம்புலன்ஸ் எண்ணிக்கை 1,303 ஆக உயரும்.
- விழுப்புரம், வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் டைடல் பூங்கா உருவாக்கப்படும். தமிழகத்தின் மேலும் 9 மாவட்டங்களில் சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்.
- நகரங்களில் 30 மீட்டர் இடைவெளியில் தெரு விளக்குகள் அமைக்கப்படும்.
- இலவச பள்ளி சீருடைகள் வழங்க ரூ.409.30 கோடி நிதி ஒதுக்கீடு.
- மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும்.
- வீடுகளுக்கான அரசு மானியம் ரூ.2.76 லட்சம் ஆக உயர்த்தப்படும்.
- வேளாண்மைக்கான இலவச மின்சாரம், வீட்டு மின்சார மானியத்திற்கு ரூ.19,872.77 கோடி நிதி ஒதுக்கீடு.
- 100 திருக்கோவில்களில் ரூ.100 கோடியில் தேர், குளம் சீரமைக்கப்படும். பாரத் நெட் திட்டத்தில் கிராமங்களுக்கு இன்டர்நெட் வசதி.
- அங்கன்வாடி மையங்களின் தரத்தை உயர்த்த சிறப்பு ஒதுக்கீடு ரூ.48.48 கோடி.
- ஆதி திராவிடர், பழங்குடியினர் சிறப்பு கூறுகள் திட்டத்திற்கு ரூ.14,696.60 கோடி நிதி ஒதுக்கீடு.
- இளைஞர் நலன், விளையாட்டுத் துறைக்கு ரூ.225.62 கோடி நிதி ஒதுக்கீடு.
- மசூதிகள், தேவாலயங்களை புதுப்பிக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு.
- தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.3,954.44 கோடி நிதி ஒதுக்கீடு.
- இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் தகுதியான குடும்பங்களை கண்டறிந்து அமல்படுத்தப்படும். மேலும் குடும்பத் தலைவர் பெண்ணாக இருந்தால் மட்டுமே உதவி கிடைக்கும் என தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. குடும்பத் தலைவர் பெயரை மாற்றத் தேவையில்லை.
- அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 2022 ஏப்ரல் 1 முதல் வழங்கப்படும்.
- தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரி 3 ரூபாய் குறைப்பு. இதனால் அரசுக்கு ரூ.1,160 கோடி இழப்பு ஏற்படும்.
- நடப்பு நிதியாண்டில் மொத்த வருவாய் ரூ.2,60,409.26 கோடி என மதிப்பீடு. வருவாய் பற்றாக்குறை ரூ.58,692.58 கோடி என கணிக்கப்பட்டு உள்ளது. நடப்பு நிதியாண்டில் மொத்த வருவாய் மதிப்பீடு ரூ.2,60,409.26 கோடி.
- கூட்டுறவு கடன் சங்கங்களில் தரப்பட்ட நகைக்கடனை தள்ளுபடி செய்வது அரசின் முன்னுரிமையாகும்.