தமிழக கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்ப விநியோகம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்ப விநியோகம் எப்போது என்பது குறித்தான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரைக்கும் நடைபெற்றது. இதனையடுத்து, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வரும் மே 8 ஆம் தேதி காலை 9:30 மணிக்கு வெளியாகும் என தமிழ்நாடு அரசு தேர்வு இயக்ககம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தற்போது வரைக்குமே தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்படிவம் கொடுக்கப்படவில்லை என்பதால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கலை கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்குவது குறித்தான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வரும் மே 1 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தினை விநியோகம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு அதாவது வரும் மே 9 ஆம் தேதியிலிருந்து மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தினை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.