
தமிழ்நாட்டில் இன்று (15-04-2025) முதல் மீன்பிடி தடைக்காலம்.. எவ்வளவு நாள் நீடிக்கும் தெரியுமா..?? அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!!
தமிழ்நாடு கடல்சார் மீன்வள நிர்வாக சட்டம் 1983 இன் கீழ், ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படும். அதனால் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 ஆம் தேதி வரையிலான காலத்தில் மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் இது, கடல் வளங்களை பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
மேலும், இது குறித்து மீன்வளத்துறை உதவி இயக்குனர் திருநாகேஸ்வரன் கூறியது, “மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 தேதி முதல் வருகிற ஜூன் 14 ஆம் தேதி வரை அதாவது அடுத்த 61 நாட்கள் அமலில் இருக்கும். இந்த தடைக்காலத்தில் மீன்பிடி விசைப்படகுகள் கடலில் சென்று மீன் பிடிக்க முழுமையாக தடை விதிக்கப்படுகிறது. ஆனால் நாட்டு படகுகள் வைத்திருக்கும் மீனவர்கள் 5 மைல் தூரத்திற்குள் சென்று மீன் பிடிக்கலாம்” என்று கூறியுள்ளார். மேலும், “மீன்பிடித் தடைக் காலத்தின்போது மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மீனவர் குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா ரூ.8,000 தமிழக அரசால் வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

























