TNPSC பொதுத்தமிழ் – சந்திப்பிழை அறிதல்

0

TNPSC பொதுத்தமிழ் 

இங்கு கொடுக்கப்பட்டுள்ள சந்திப்பிழை அறிதல் முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும்.  இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

சந்திப்பிழை அறிதல்

  • சந்திப் பிழையை நீக்குதல்

வல்லின எழுத்துக்கள் ஆறு – க், ச், ட், த், ப் இவைகளில் க், ச், த், ப் ஆகிய எழுத்துகள் மிகவும் வலிமையானவை. ட்,ற – ஆகிய இரண்டு எழுத்துகளும் மொழிக்கு முதலில் வர இயலாதவை வல்லினம் என்று அழைக்கப்படும்.

  • வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் வல்லினம் மிகும் இடங்கள்

1. இரண்டாம் வேற்றுமை உருபிற்குப் பின் வல்லினம் மிகும் (ஐ)

  • குழந்தையை + கண்டேன்₌ குழந்தையைக் கண்டேன்
  • பொருளை + தேடு ₌ பொருளைத்தேடு
  • புலியை + கொன்றான் ₌ புலியைக் கொன்றான்
  • நூலை + படி ₌ நூலைப்படி

2. நான்காம் வேற்றுமை உருபிற்குப் பின் வல்லினம் மிகும்.

  • வீட்டிற்கு + சென்றான் ₌ வீட்டிற்குச் சென்றான்
  • கல்லூரிக்கு + போனாள் ₌ கல்லூரிக்குப் போனாள்

3. ஆறாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகும். ‘அது’ – மறைந்திருப்பது

  • தாமரை+ பூ ₌ தாமரைப்பூ
  • குதிரை + கால் ₌ குதிரைக்கால்

4. ஏழாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகும்.

  • குடி + பிறந்தார் ₌ குடிப்பிறந்தார்
  • வழி + சென்றார் ₌ வழிச்சென்றார்

5. வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் வர மிகும் (வல்லெழுத்தை அடுத்து வந்த குற்றிலுகரம்)

  • பாக்கு + தூள் ₌ பாக்குத்தூள்
  • தச்சு + தொழில் ₌ தச்சுத்தொழில்
  • கேட்டு + கொடு ₌ கேட்டுக்கொடு
  • பத்து + பாட்டு ₌ பத்துப்பாட்டு
  • படிப்பு + செலவு ₌ படிப்புச்செலவு
  • பற்று + தொகை ₌ பற்றுத்தொகை

6. மென்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் சில இடங்களில் வல்லினம் மிகும்.

  • இரும்பு + தூள் ₌ இரும்புத்தூள்
  • மருந்து + கடை ₌ மருந்துக்கடை
  • கன்று + குட்டி ₌ கன்றுக்குட்டி

7. அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும் ‘எ’ என்னும் வினா எழுத்திற்குப் பின்னும் வலி மிகும்.

  • அ+ கடல் ₌ அக்கடல்
  • இ + பாடம் ₌ இப்பாடம்
  • உ + சிறுவன் ₌ உச்சிறுவன்
  • எ + தொழில் ₌ எத்தொழில்

8. சுட்டு, வினாக்களின் திரிபுகளான அந்த, இந்த, எந்த என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும்.

  • அந்த + கிணறு ₌ அந்தக்கிணறு
  • இந்த +தமிழ் ₌ இந்தத்தமிழ்
  • எந்த + செயல் ₌ எந்தச்செயல்

9. அந்த, இந்த, அப்படி, இப்படி என்னும் சுட்டுச் சொற்களின் பின் வல்லினம் மிகும்.

  • அந்த + பையன் ₌ அந்தப்பையன்
  • இந்த + சிறுவன் ₌ இந்தச்சிறுவன்
  • அப்படி + செய் ₌ அப்படிச்செய்
  • இப்படி +பார் ₌ இப்படிப்பார்

10. எந்த, எப்படி, எங்கு என்ற வினாச் சொற்களின் பின் வல்லினம் மிகும்.

  • எங்கு + பார்த்தாய் ₌ எங்குப்பார்த்தாய்?
  • எப்படி + சாதித்தாய் ₌ எப்படிச்சாதித்தாய்?
  • எந்த + செடி ₌ எந்தச்செடி?

11. நிலைமொழி ஈற்றில் உயிரெழுத்து நிற்கää வருமொழி முதலில் வரும் வல்லினம் மிகுந்து ஒலிக்கும் (உயிரீற்றுச் சொற்களின் பின் வல்லினம் மிகும்)

  • நிலா+ சோறு ₌ நிலாச்சோறு
  • மழை+ காலம் ₌ மழைக்காலம்
  • பனி + துளி ₌ பனித்துளி

12. இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்

  • சாரை + பாம்பு ₌ சாரைப்பாம்பு
  • மார்கழி + திங்கள் ₌ மார்கழித்திங்கள்
  • மல்லி +பூ ₌ மல்லிப்பூ

13. பண்புத்தொகையில் வல்லினம் மிகும்

  • சதுரம் + பலகை ₌ சதுரப்பலகை
  • வட்டம் + பாறை ₌ வட்டப்பாறை
  • பச்சை + பட்டு ₌ பச்சைப்பட்டு

14. அகர இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும்

  • தேட + சொன்னான் ₌ தேடச்சொன்னான்
  • வர + சொன்னான் ₌ வரச்சொன்னான்
  • ஓடி + பிடித்தான் ₌ ஓடிப்பிடித்தான்

15. ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகும்

  • பூ +பறித்தான் ₌ பூப்பறித்தான்
  • கை + கரண்டி ₌ கைக்கரண்டி
  • தீ + பற்றியது ₌ தீப்பற்றியது

16. ஆய், போய் என்னும் வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும்

  • நன்றாய் + பேசினார்₌ நன்றாய்ப்பேசினார்
  • போய் + தேடு ₌ போய்த்தேடு

17. இனி, தனி மற்று, மற்ற, மற்றை என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்

  • இனி + காணலாம் ₌ இனிக்காணலாம்
  • தனி + தமிழ் ₌ தனித்தமிழ்
  • மற்று + கண்டவை ₌ மற்றுக்கண்டவை
  • மற்ற+ பொருள்கள் ₌ மற்றப்பொருள்கள்
  • மற்றை + கூறுகள் ₌ மற்றைக் கூறுகள்

18. என, ஆக என்னும் சொற்களுக்குப் பின் வரும் வல்லினம் மிகும்.

  • என + கூறினான் ₌ எனக்கூறினான்
  • ஆக + சொன்னான் ₌ ஆகச்சொன்னான்

19. சால, தவ என்னும் உரிச்சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்

  • சால + சிறந்தது ₌ சாலச்சிறந்தது
  • தவ + பெரிது ₌ தவப்பெரிது

20. ஈறுகெட்ட எதிரிமறைப் பெயரெச்சத்தின் பின்வரும் வல்லினம் மிகும்

  • உண்ணா + சோறு ₌ உண்ணாச்சோறு
  • ஓடா + குதிரை ₌ ஓடாக்குதிரை
  • அழியா + புகழ் ₌ அழியாப்புகழ்

21. தனிக்குறிலையடுத்து வரும் ஆ என்னும் நெடிலுக்குப் பின்வரும் வல்லினம் மிகும்

  • பலா + சுளை ₌ பலாச்சுளை
  • இரா + பகல் ₌ இராப்பகல்
  • கனா + காலம் ₌ கனாக்காலம்

22. முற்றியலுகரச் சொற்களின் பின் வல்லினம் மிகும்

  • திரு + குறள் ₌ திருக்குறள்
  • பொது + சொத்து ₌ பொதுச்சொத்து

23. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்

  • தண்ணீர் + குடம் ₌ தண்ணீர்க்குடம்
  • மலர் + கூடை ₌ மலர்க்கூடை

24. மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்

  • மரம் + பெட்டி ₌ மரப்பெட்டி
  • இரும்பு + சாவி ₌ இரும்புச்சாவி

25. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்

  • சட்டை + துணி ₌ சட்டைத்துணி
  • குடை + கம்பி ₌ குடைக்கம்பி

26. ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்

  • அடுப்பு + புகை ₌ அடுப்புப்புகை
  • விழி + புனல் ₌ விழிப்புனல்

27. உவமைத்தொகையில் வல்லினம் மிகும்

  • பவளம் + பற்று ₌ பவளப்பற்று
  • மலர் + கண் ₌ மலர்க்கண்

28. ட, ற, ஒற்று இரட்டிக்கும் உயிர்தொடர், நெடி தொடர் குற்றியலுகரத்திற்குப் பின் வல்லினம் மிகும்

  • வயிறு + போக்கு ₌ வயிற்றுப்போக்கு(உயிர்த்தொடர்)
  • முரடு + காளை ₌ முரட்டுக்காளை
  • நாடு + பற்று ₌ நாட்டுப்பற்று (நெடில்தொடர்)
  • காடு + தேன் ₌ காட்டுத்தேன்

வல்லினம் மிகா இடங்கள்:

1. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினமிகாது

  • தமிழ் + கற்றார் ₌ தமிழ் கற்றார்
  • நீர் + குடித்தான் ₌ நீர் குடித்தான்
  • துணி + கட்டினான் ₌ துணி கட்டினான்

2. உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது

  • தாய் + தந்தை ₌ தாய் தந்தை
  • இரவு + பகல் ₌ இரவு பகல்
  • செடி+கொடி ₌ செடி கொடி

3. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிர்த்து மற்றப் பெயரெச்சங்களின் பின் வல்லினம் மிகாது

  • நல்ல + குழந்தை ₌ நல்ல குழந்தை
  • படித்த + பெண் ₌ படித்த பெண்
  • செய்யாத+ செயல் ₌ செய்யாத செயல்

4. உயர்திணைப் பொதுப்பெயர்களின் பின் வல்லினமிகாது

  • தொழிலாளர் + தலைவர் ₌ தொழிலாளர் தலைவர்
  • மாணாக்கர் + கூடினர் ₌ மாணாக்கர் கூடினர்
  • தாய் + பாடினாள் ₌ தாய் பாடினாள்

5. அஃறிணை வினைமுற்றின் பின் வல்லினம் மிகாது

  • முழங்கின + சங்குகள் ₌ முழங்கின சங்குகள்
  • பாடின + குயில்கள் ₌ பாடின குயில்கள்
  • வந்தது + கப்பல் ₌ வந்தது கப்பல்

6. எட்டு, பத்து தவிர மற்ற எண்களின் பின் வல்லினம் மிகாது

  • ஒன்று + கொடு ₌ ஒன்று கொடு
  • இரு + சீர் ₌ இருசீர்
  • மூன்று + கிளி ₌ மூன்று கிளி

7. அது, இது என்னும் சட்டகளின் பின்னும் எது? யாது? என்னும் வினாச் சொற்களின் பின்னும் வல்லினம் மிகாது.

  • அது + போயிற்று ₌ அது போயிற்று
  • இது + பறந்தது ₌ இது பறந்தது
  • எது + கண்டது ₌ எது கண்டது?
  • யாது + சொல் ₌ யாது சொல்?

8. அத்தனை, இத்தனை, எத்தனை எனும் சொற்களின் பின் வல்லினம் மிகாது.

  • அத்தனை + பழங்களா? ₌ அத்தனை பழங்களா?
  • இத்தனை + பூக்களா? ₌ இத்தனை பூக்களா?
  • எத்தனை + தேங்காய்? ₌ எத்தனை தேங்காய்?

9. வினாவை உணர்த்தும் ஆ, ஓ, ஏ, யா என்னும் வினா எழுத்துகளின் பின் வல்லினம் மிகாது

  • அவளா + தைத்தாள் ₌ அவளா தைத்தாள்?
  • இவளோ + போனாள் ₌ இவளோ போனாள்?
  • அவனே + செல்வான் ₌ அவனே செல்வான்?

10. சில, பல என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகாது

  • பல + குடிசைகள் ₌ பல குடிசைகள்
  • சில + சொற்கள் ₌ சில சொற்கள்

11. விளிப்பெயர் பின்னும், வியங்கோள் வினைமுற்றின் பின்னும் வல்லினம் மிகாது

  • கண்ணா + கேள் ₌ கண்ணாகேள்
  • வேலா + செல் ₌ வேலாசெல்
  • வாழ்க + தமிழ் ₌ வாழ்கதமிழ்

12. எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது

  • நாய் + போனது ₌ நாய் போனது
  • வள்ளி + படித்தாள் ₌ வள்ளி படித்தாள்

13. வினைத்தொகையில் வல்லினம் மிகாது

  • ஊறு + காய் ₌ ஊறுகாய்
  • ஆடு + கொடி ₌ ஆடு கொடி
  • விரி + கதிர் ₌ விரி கதிர்

14. அடுக்குத் தொடரில் வல்லினம் மிகாது

  • தீ + தீ ₌ தீதீ
  • பாம்பு + பாம்பு ₌ பாம்புபாம்பு

15. சில ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது

  • வள்ளுவர் +கருத்து ₌ வள்ளுவர் கருத்து
  • ஒளவை + சொல் ₌ ஒளவை சொல்

16. அவை இவை என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகாது

  • அவை+போயின ₌ அவை போயின
  • இவை + செய்தன ₌ இவை செய்தன

17. படியென்னும் சொல் வினையோடு சேர்ந்து வருமிடத்தில் வல்லினம் மிகாது

  • வரும்படி +கூறினான் ₌ வரும்படி கூறினான்
  • போகும்படி + சொன்னான் ₌ போகும்படி சொன்னான்

18. இரட்டைக் கிளவியில் வல்லினம் மிகாது

  • கல + கல ₌ கலகல
  • பள + பள ₌ பளபள

19. அவை, இவை என்னம் சுட்டுச் சொற்களின் பின் வல்லினம் மிகாது

  • அவை + சென்றன ₌ அவை சென்றன
  • இவை + செய்தன ₌ இவை செய்தன

20. அது, இது என்னும் சுட்டுகளின் பின்வரும் வல்லினம் மிகாது

  • அது + பறந்தது ₌ அது பறந்தது
  • இது + கடித்தது ₌ இது கடித்தது

21. எது, யாது என்னும் வினாச்சொற்களின் பின் வல்லினம் மிகாது

  • எது + பறந்தது ₌ எது பறந்தது?
  • யாது + தந்தார் ₌ யாது தந்தார்?

22. இரண்டு வடசொற்கள் சேரும்போது வல்லினம் மிகாது

  • சங்கீத+ சபா ₌ சங்கீத சபா
  • மகாஜன + சபா ₌ மகாஜன சபா

23. சில வினையெச்சத் தொடரில் வல்லினம் மிகாது

  • வந்து + போனான் ₌ வந்து போனான்
  • செய்து + கொடுத்தான் ₌ செய்து கொடுத்தான்

சந்திப்பிழை அறிதல்  Download Pdf 

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

TNPSC Group 2 பாடக்குறிப்புகள் PDF Download

TNPSC Group 2 நடப்பு நிகழ்வுகள் PDF Download

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!