இன்று முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் – அரசு அறிவிப்பு!!
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு நிர்வாகம் யூனியன் பிரதேசத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவித்து உள்ளது. அதில் பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
முழு ஊரடங்கு:
புதுச்சேரியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதன்படி முழு ஊரடங்கானது (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு ஏற்கனவே அமலில் உள்ளது.
TN Job “FB Group” Join Now
புதுச்சேரியில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஏப்ரல் 23 ஆம் தேதி (இன்று) இரவு 10 மணி முதல் ஏப்ரல் 26 ஆம் தேதி காலை 5 மணி வரை மொத்த யூனியன் பிரதேசத்தில் முழு ஊரடங்கு அமலாகிறது. அங்கு வியாழக்கிழமை 987 புதிய கோவிட் -19 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் ஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பு? ஏப்ரல் 25ம் தேதி பிரதமர் உரை!
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,580 ஆக உயர்ந்துள்ளது. அங்கு 5,923 பேர் கொரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரை 726 பேர் உயிரிழந்து உள்ளனர்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
- அனைத்து கடைகளும் வணிகங்களும் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், ஹோட்டல்களுக்கு மதியம் 2 மணிக்குப் பிறகு பார்சல் வழங்க அனுமதி அளிக்கப்படும்.
- குறைந்த எண்ணிக்கையிலான விருந்தினர்களுடன் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற அனுமதிக்கப்படும்.
- ஊர்வலங்கள் அல்லது எந்த மத நிகழ்வுகளும் அனுமதிக்கப்படாது, மேலும் கோவிட் -19 பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்கும் வரை மக்கள் வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
- முகக்கவசம் மற்றும் கிருமிநாசினிகள் கூட்டுறவு பால் நிலையங்களில் மானிய விலையில் விற்கப்படும் என்று அரசு வெளியீடு தெரிவித்துள்ளது.
- கொரோனா சிறப்பு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுக்கான படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும், புதிய கோவிட் -19 பராமரிப்பு மையங்கள் திறக்கப்படும். மேலும் மருந்துகள் மற்றும் பிற மருத்துவ வசதிகள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.