தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விடுமுறை தினங்களில் பொருட்கள் அனுப்ப தடை!
தமிழக ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை தினங்களில் அத்தியாவசிய உணவு பொருட்கள் சப்ளை செய்வதைத் தவிர்க்குமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.
விடுமுறை தினங்களில் பொருட்கள் அனுப்ப தடை:
தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. மக்களுக்கு 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. தமிழக குடும்பங்களுக்கு 2,11,93,724 ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 6,82,12,884 பேர் பயனடைந்து வருகின்றனர். இந்த அட்டை இந்திய குடிமகனின் முக்கிய ஆவணமாக உள்ளது. ஒவ்வொரு மாநிலங்களும் இந்த ரேஷன் அட்டையை அதிகாரப்பூர்வ ஆவணமாக அறிவித்துள்ளது. நம் அனைத்து பயன்பாட்டிற்கும் ரேஷன் கார்டு பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் பொதுமக்களுக்கு ரேஷன் அட்டை மூலம் தான் சென்றடைகிறது.
இந்தியாவில் முடிவுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – ஒன்றை மட்டும் நீட்டித்த மத்திய அரசு!
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு, மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படுகிறது. அதற்கு மாற்றாக, அந்த வாரங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை நாள் ஆக உள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை தங்கு தடையின்றி வாங்குவதற்காக மாதந்தோறும் முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் விடுமுறை நாளான வெள்ளிக்கிழமை அன்று கிடங்குகளில் இருந்து கடைகளுக்கு பொருட்கள் சப்ளை செய்யப்படுகின்றன. அதை இறக்கி வைக்க ஊழியர்கள் செல்ல வேண்டி இருப்பதால் விடுமுறை கிடைக்காமல் சிரமப்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளனர்.
எனவே, ரேஷன் ஊழியர்கள் விடுமுறை நாட்களில் கிடங்கிலிருந்து ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்புவதை தவிர்க்குமாறு, தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளனர். ஊழியர்கள் வைத்த இந்த கோரிக்கைக்கு தமிழக அரசு செவி சாய்த்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் மாதத்தின் முதல் இரண்டு வெள்ளிக் கிழமைகள், ரேஷன் கடைகளுக்கு விடுமுறை என்பதால், அந்த நாட்களில் பொருட்கள் சப்ளை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், இணை பதிவாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு ரேஷன் கடை ஊழியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.