இந்தியாவில் முடிவுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – ஒன்றை மட்டும் நீட்டித்த மத்திய அரசு!
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 1225 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி, கைகளை சுத்தம் செய்தல் போன்ற விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முடிவுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 2019ம் ஆண்டின் டிசம்பர் மாதம் பரவ ஆரம்பித்தது. மேலும் இந்தியாவில் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பரவத் தொடங்கிய கொரோனா தொற்றின் பாதிப்புகள் மார்ச் மாதத்தில் கோரத்தாண்டவம் ஆடிய நிலையில் கொரோனா தொற்று பேரிடராக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. மேலும் தமிழகம், டெல்லி, ஹரியானா, குஜராத், உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து முதற்கட்டமாக பள்ளி, கல்லூரிகள், பெரும்பாலான வணிக மையங்கள் மூடப்பட்டன.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? முதல்வர் முக்கிய ஆலோசனை!
இதையடுத்து, தொற்றின் தீவிரம் அதிகரித்ததால், பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் இருந்த 75 மாவட்டங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் பொது ஊரடங்கை முதன் முறையாக அறிவித்தார். மேலும் தனிநபர் இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தொடர்ந்து பொது போக்குவரத்து நிறுத்தம், அனைத்து கல்வி நிறுவனங்கள் மூடல் என பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இதையடுத்து தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியதால் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், 2021ம் ஆண்டு மீண்டும் கொரோனா 2வது அலையின் தாக்கம் பெரும் பாதிப்புகளை உருவாக்கியது. இந்தியாவில் இரண்டாவது அலையின் போது நாள் ஒன்றுக்கு இரண்டரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து இந்தியாவில் கொரோனாவின் தாக்குதல் உச்சநிலையை எட்டத் தொடங்கியதை அடுத்து கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் அறிமுகம் செய்யப்பட்டு அவை பரவலாக்கப்பட்டதால் இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுவதும் தற்போது கடந்த 24 மணி நேரத்தில் 1225 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே கொரோனா தொற்று கணிசமாக குறைந்து வருவதால் மாஸ்க் அணிதலை மக்கள் மறந்துவிட்டனர். ஆனால் பொதுமக்கள் முகக் கவசம் அணிவதுடன், கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர். மார்ச் 31-ஆம் தேதிக்கு பின்னர் புதிய கட்டுப்பாடுகள் எதுவும் வெளியிடப்படாது என்று கடந்த 23ம் தேதி உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.