தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து? வலுக்கும் கோரிக்கைகள்!
அனைத்து மாநில அரசு ஊழியர்களும் தங்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி தமிழகத்தில் ஆசிரியர்கள் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தற்போதைய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்களுக்கான சலுகைகள் குறைவாக உள்ளது, அதனால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளனர்.
வலுக்கும் கோரிக்கைகள்:
நாடு முழுவதும் 2003ஆம் ஆண்டு வரை பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. பின்னர் CPS எனப்படும் புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் கிடையாது என்பதால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கை 19 ஆண்டுகளாக நீண்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது.
பள்ளி மாணவர்களுக்கு 51 நாட்கள் கோடை விடுமுறை – மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு!
திமுக அளித்த வாக்குறுதியை நம்பி, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் தமிழக அரசு இது குறித்து ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. அண்மையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். இதை எதிர்த்து பல்வேறு துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வரிசையில் தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளருமான நேரு தலைமை வகித்தாா். இதில் திமுக அரசு தனது தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். அரசு ஊழியர்கள்/ ஆசிரியர்கள் கோரிக்கைக்கு தமிழக அரசு செவி சாய்த்து விரைவில் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.