இனி நெடுஞ்சாலை விதிகளை மீறினால் இரு மடங்கு அபராதம்.. ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறை..
சுங்க வரி என்பது இரு மாநிலங்களுக்கு இடையே அமைத்துள்ள நெடுஞ்சாலைகளைக் கடக்கும்போது வாகன ஓட்டுநர்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணமாகும். இவற்றை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நிர்வகிக்கிறது. மேலும், புதிய நெடுஞ்சாலைகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு செய்வதற்காக இந்த சுங்க வரி பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இந்த சுங்கவரி வசூல் தொடர்பாக ஏப்ரல் முதல் புதிய விதிகள் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, “பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் இரு மடங்கு சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும் என்றும், மும்பையில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் பாஸ்டேக் அமைப்பில் பிரத்தியேகமாக இயங்கும் என மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டு கழகம் (MSRDC) அறிவித்துள்ளது”. மேலும், இந்த முடிவு சுங்கக் கட்டணங்களை ஒழுங்குபடுத்துதல், காத்திருப்பு நேரங்களைக் குறைத்தல் மற்றும் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல் போன்றவற்றை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிலையில் “ஊடக அறிக்கையின்படி, பள்ளி பேருந்துகள், இலகுரக மோட்டார் வாகனங்கள் மற்றும் மாநில போக்குவரத்து பேருந்துகளுக்கு இந்த ஆணையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், முலுண்ட் மேற்கு, முலுண்ட் கிழக்கு, ஐரோலி, தஹிசர், வாஷி, மும்பை-புனே விரைவுச்சாலை, பழைய மும்பை-புனே நெடுஞ்சாலை மற்றும் மும்பை-நாக்பூர் சம்ருதி விரைவுச்சாலை உள்ளிட்ட முக்கிய நெடுஞ்சாலைகளில் இந்த விதிமுறை அமல்படுத்தப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.


























