இன்று முதல் மாலை 5 மணிவரை மட்டுமே கடைகள் திறப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
கொரோனா தொற்று சற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு கோவை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளார். அதன்படி தினசரி மாலை 5 மணிவரை மட்டுமே கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் ஏற்கனவே தளர்வுகளுடன் அமலில் உள்ள முழு ஊரடங்கு ஆகஸ்ட் 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தற்போது ஆடி மாத பண்டிகைகள் தொடங்கி உள்ளதால் கோவில்களில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் நோக்கில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழக அரசால் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு கூடுதலாக கீழ்கண்ட கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.
- கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.
- கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, காந்திபுரம் 5,6,7வது தெருக்கள், ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை (ராயல் நகர் சந்திப்பு), ரைஸ் மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, எல்லை தோட்ட சந்திப்பு, துடியலூர் சந்திப்பு ஆகிய தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது.
- மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களும் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அமர்ந்து 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 9 வரை பொதுமக்கள் கூடுவதற்கு தடை – கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!
- கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி, சில்லரை விற்பனைக்கு அனுமதியில்லை மற்றும் 50 சதவிகித கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்படும். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் இதனை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- கேரள-தமிழ்நாடு மாநில எல்லைகள் அனைத்தும் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேற்படி சோதனைச்சாவடி வழியாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்குள் வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட கோவிட் நெகட்டிவ் சான்று அல்லது கொரோனா தடுப்பூசி (2 தவணைகள்) செலுத்தப்பட்டதற்கான சான்று கண்டிப்பாக உடன் வைத்திருக்க வேண்டும். மேற்கண்ட சான்றுகள் இல்லையெனில் சோதனைச்சாவடிகளிலேயே பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
- மக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள் அனைத்து கொரோனா தடுப்பு நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.