நிலநடுக்கத்தால் உருக்குலைந்த மியான்மர்…!! உதவிக்கரம் நீட்டும் இந்தியா…!!
பூமியின் மேலோடு டெக்டானிக் தட்டுகள் எனப்படும் பல பெரிய துண்டுகள் பிணைப்பிலிருந்து நகரும் அளவுக்கு அழுத்தம் உண்டாகும் போது நிலநடுக்கம் ஏற்படுகிறது. அந்த வகையில் “தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய நாடான மியான்மரில் நேற்று (28-03-2025) மண்டலே பகுதியில் 7.7 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த 2 நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஆனது இரண்டு முக்கிய நகரங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 700 ஐ நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது”.
மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள பலரை மீட்டெடுக்கும் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் “நிலநடுக்கத்தால் உருக்குலைந்த மியான்மருக்கு உணவு, மருந்துகள் உள்ளிட்ட 15 டன் நிவாரணப் பொருட்களை இந்திய அரசாங்கம், ராணுவ விமானம் மூலம் அனுப்பியுள்ளது. மேலும், எந்தவொரு அவசர நிலை தேவை ஏற்பட்டாலும் , தாய்லாந்தில் உள்ள இந்திய குடிமக்கள் +66 618819218 என்ற அவசர எண்ணை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது”.
























