அடுத்த சில நாட்களில் சுங்க வரி கட்டணங்கள் குறையும்.. மத்திய அமைச்சர் வெளியிட்ட சிறப்பு தகவல்..!!
நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் நோக்கில் மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளை நிறுவியது. இந்த நெடுஞ்சாலைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் லிமிடெட் (NHIDCL) ஆகிய அமைப்புகள் நிர்வகிக்கின்றன. இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி சாமானிய மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், இந்தியாவில் உள்ள அனைத்து சுங்க முறையையும் மாற்றும் ஒரு புதிய முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்த போவதாக கூறியுள்ளார்.
அதாவது, கடந்த மாதம் மாநிலங்களவையில் பேசிய அமைச்சர், “இந்தியாவின் வேகமாக விரிவடைந்து வரும் சாலை உள்கட்டமைப்பை ஆதரிப்பதில் சுங்கக் கட்டணங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதி, 2008 மற்றும் அதன் தொடர்புடைய சலுகை ஒப்பந்தங்களின் கீழ் உள்ள விதிகளின் அடிப்படையில் இயங்குகிறது என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து, 2023-24 நிதியாண்டில், சுங்கச்சாவடிகளிலிருந்து ரூ 64,809 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்றும், இது முந்தைய ஆண்டை விட 35% அதிகரிப்பை பிரதிபலிக்கிறது என்று கூறினார். இதை தொடர்ந்து, சமீபத்திய சந்திப்பில் பேசிய அவர் புதிய சுங்கச்சாவடி முறை செயல்படுத்த பட்டவுடன் இந்தியா முழுவதும் சுங்கக் கட்டணங்கள் குறைக்கப்படும் என்றும் அதற்கான அறிவிப்பு அடுத்த 8-10 நாட்களில் வெளியாகும் என உறுதியளித்துள்ளார்”.



























