நடப்பு நிகழ்வுகள் – 24 மே 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 24 மே 2023
நடப்பு நிகழ்வுகள் - 24 மே 2023

நடப்பு நிகழ்வுகள் – 24 மே 2023

தேசிய செய்திகள்

உலகளவில் தலைசிறந்த-75 நிறுவங்களில் IIM கோழிக்கோடு ஆனது 72 வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • மே 22 அன்று வெளியிடப்பட்ட பைனான்சியல் டைம்ஸ் (FT) தரவரிசை பட்டியலில், உலகளவில் சிறந்த 75 சேர்க்கை நிர்வாகத் திறன் வழங்குநர்களில் IIM கோழிக்கோடு நிறுவனமானது 72 வது இடத்தைப் பிடித்து சாதனையை படைத்துள்ளது.

  • இந்த பட்டியலில் மூன்று IIM-கள் மற்றும் நான்கு இந்திய B-பள்ளிகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இது இந்திய கல்வி தரத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

இந்தியாவில் உள்நாட்டு ஆளில்லா விமானங்களின் உற்பத்தியை அதிகரிக்க கூட்டு மேம்பாட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • இந்தியாவில் உள்நாட்டு டிரோன்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், கருடா ஏரோஸ்பேஸ் மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்(HAL)-இன் துணை நிறுவனமான நைனி ஏரோஸ்பேஸ் நிறுவனமானது மே 22 அன்று ஒரு கூட்டு மேம்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

  • இந்த ஒப்பந்தத்தின் மூலம் தலா 4.5 லட்சம் மதிப்பிலான, 7,000 க்கும் மேற்பட்ட ட்ரோன்களை உற்பத்தி செய்ய முன்பதிவு செய்ய உள்ளதாக கருடா நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் “ஜங்கனன பவன்”(கணக்கெடுப்பு  கட்டிடம்) ஐ   திறந்து வைத்துள்ளார்.
  • மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களால், மே 23 அன்று புது தில்லியில் “”ஜங்கனன பவன்”-ஐ (கணக்கெடுப்பு கட்டிடம்) திறந்து வைத்துள்ளார்.

  • இந்நிகழ்ச்சியில் ஜியோஃபென்சிங்கிற்கான மேம்படுத்தப்பட்ட எஸ்ஆர்எஸ் மொபைல் செயலி மற்றும் பிறப்பு, இறப்பு பதிவுக்கான இணையதள போர்டல் ஆகியவற்றையும்  மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்துள்ளார். 1981 முதல் தற்போது வரையிலான இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு குறித்த பத்திரத்தையும் வெளியிட்டுள்ளார்.

கல்வி வளர்ச்சி மற்றும் திறன் ஆகியவற்றை மேம்படுத்த இந்தியா-அமெரிக்கா திட்டம்.
  • கல்வி அமைச்சகம் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை இணைந்து மே 22 அன்று கல்வி வளர்ச்சி மற்றும் திறன் மேம்பாடு குறித்த இந்தியா-அமெரிக்க பணிக்குழுவை மெய்நிகர் முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

  • இந்த ஒத்துழைப்பின் மூலம் கல்வி வளர்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல்களுக்கான சர்வதேச மாநாட்டை புதுதில்லியில் ஸ்ரீ பகவந்த் குபா மே 24 அன்று  தொடங்கி வைக்க உள்ளார்.
  • இரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையானது, மே 24 அன்று புது தில்லியில் “கெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோகெமிக்கல்” துறையில் கவனம் செலுத்துவதற்காக இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) உடன் இணைந்து உலகளாவிய வணிக சமூகத்திற்கான சர்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது

  • இந்த மாநாடு தொழில் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு காண்பதற்கும், இரசாயன மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறையில் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவது பற்றி விவாதிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

சர்வதேச மின் வாகன கண்காட்சி 2023
  • சர்வதேச மின் வாகன கண்காட்சி-2023 இன் 2வது பதிப்பானது மே 26, 2023அன்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தொடங்க உள்ளது. இந்த கண்காட்சியானது மே 26 முதல் 28 வரை நடைபெறுகிறது.

  • இந்த நிகழ்ச்சியானது இந்தியாவில் மின் வாகன மேம்பாட்டின் பரந்த வாய்ப்புகள் மற்றும் சாத்தியமான சவால்களை எவ்வாறு கையாளுவது பற்றிய புரிதலை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

சர்வதேச செய்திகள்

டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட ‘திருக்குறளை’ பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.
  • தென்மேற்கு பசிபிக் பகுதி மக்களுக்கு இந்திய சிந்தனை மற்றும் கலாச்சாரத்தை நெருக்கமாக்குவதற்கு, பிரதமர் மோடி மற்றும் பப்புவா நியூ கினியா நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மாரப்புடன் இணைந்து மே 22 அன்று “டோக் பிசின்” மொழியில் தமிழின் உன்னதமான படைப்பான ‘திருக்குறளை ‘ வெளியிட்டுள்ளனர்.

  • நியூ பிரிட்டன் மாகாணத்தின் சுபா சசீந்திரன் மற்றும் ஆளுநர் சசீந்திரன் முத்துவேல் ஆகியோரால் இணைந்து இந்த புத்தகமானது எழுதப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி புறநகர் பகுதிக்கு ‘லிட்டில் இந்தியா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • சிட்னியில் நடைபெற்ற சிறப்பு சமூக நிகழ்ச்சியின்போது, ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு தெருவுக்கு, பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோர் இணைந்து, “லிட்டில் இந்தியா” என்று மே 23 அன்று அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

  • இந்த நிகழ்வின் மூலம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் நட்புறவு மேம்பட்டு சிறப்படைந்துள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் பிறந்த “யாகூப் படேல்” இங்கிலாந்தின் பிரஸ்டன் நகரின் மேயராக பதவியேற்பு.
  • இங்கிலாந்தின் லங்காஷயர் கவுண்டியில் உள்ள பிரஸ்டன் நகரின் மேயராக குஜராத்தில் பிறந்த “யாகூப் படேல்” என்ற நபர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

  • குஜராத்தின் பருச்சில் பிறந்த இவர், 1976 இல் பரோடா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பின் UK க்கு குடிபெயர்ந்து,  கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரஸ்டன் நகர சபையின் வரலாற்றில் “முதல் முஸ்லீம் கவுன்சிலர்” என்ற அந்தஸ்தயும் பெற்றுள்ளார்.

மாநில செய்திகள்

நவம்பர் மாதத்திற்குள் அஸ்ஸாம் முழுவதிலும் AFSPA திரும்பப் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அசாம் மாநிலத்திலிருந்து நவம்பர் மாதத்திற்குள் “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA)” நீக்கப்படும் என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மே 22 அன்று அறிவித்துள்ளார்.

  • நீக்கப்பட்ட பின்னர் மத்திய ஆயுதக் காவல் படைகளுக்கு (CAPF) பதிலாக அஸ்ஸாம் போலீஸ் அதில் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

சந்திரயான்-3 விண்கலமானது ஜூலை 12ஆம் தேதி விண்ணில் ஏவ உள்ளதாக திட்டம்.

  • இஸ்ரோவின் 3ஆவது நிலவு பயணமான, சந்திரயான்-3 இன் ஏவுதலானது வரும் ஜூலை 12 ஆம் தேதி நடைபெற உள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • சந்திராயன் 3 விண்கலமானது ஆகஸ்ட் 23 ஆம் தேதி சந்திரனின் தென் துருவத்தை அடையும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விருதுகள்

இந்தி மொழியில் சிறந்து விளங்கியதற்காக வழங்கப்படும் 2 விருதுகளானது நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு.
  • மத்திய அரசானது இந்தி மொழியில் சிறந்து விளங்கியதற்காக வழங்கப்பட்ட 2 விருதுகளானது  நிறுத்தப்படுவதாக மத்திய அரசு மே 22 அன்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மத்திய உயர்கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

  • 1992ஆம் ஆண்டு முதல் சிறந்த இந்தி எழுத்தாளர்களுக்கு “சிக்சா புரஸ்கார்” என்ற விருதும், இந்தி பேசாத மக்கள் இந்தியில் எழுதுவதை ஊக்குவிக்கும் வகையில் வழங்கி வந்த ‘ஹிந்திதார் பாஷி ஹிந்தி லேகக் புரஸ்கார்’என்ற விருதையும் கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

விளையாட்டு செய்திகள்

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தரவரிசையில் – நீரஜ் சோப்ரா முதலிடம்.
  • ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா மே 22, 2023 அன்று  உலகின் ஆண்கள் ஈட்டி எறிதல் தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

  • சமீபத்தில்  நீரஜ் மொத்தம் 1455 புள்ளிகளை பெற்ற நிலையில், 1433 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்த கிரெனடாவின் உலக சாம்பியனான ஆண்டர்சன் பீட்டர்ஸை முறியடித்து, உலகின் புதிய நம்பர்-1 ஈட்டி எறிதல் வீரராகியுள்ளார்.

ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2023 ஆனது ஜூன் 13ல் சென்னையில் தொடங்க உள்ளது.
  • ஸ்குவாஷ் உலகக் கோப்பையானது ஜூன் 13 முதல் 17 வரை இந்திய “ஸ்குவாஷ் & டிரையத்லான் அகாடமியில்” (ISTA) நடைபெறும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) மற்றும் உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பு (WSF) அதிகாரப்பூர்வமாக மே 22 அன்று அறிவித்துள்ளது.

  • எகிப்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, கொலம்பியா, ஹாங்காங், ஜப்பான், மலேசியா ஆகிய 8 நாடுகள் இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியானது மே 23 அன்று உத்தரப் பிரதேசத்தில் தொடக்கம்.
  • கபடி போட்டியை முதன்மையாக கொண்டு 3வது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுகளானது உத்தரபிரதேசத்தின் கவுதம் புத் நகர் மாவட்டத்தில் மே 23 அன்று மாலை தொங்கியுள்ளது.

  • இந்த முதல் கபடி லீக் போட்டிகள் மாலை 4:00 மணி முதல் நடைபெறும் என்றும் இதில் பல்வேறு பல்கலைகழகங்களை சேர்ந்த 15 அணிகள் பங்கேற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தினம்

உலக ஆமை தினம் 2023

  • ஆமைகள் மற்றும் அவைகள் மறைந்து வரும் வாழ்விடங்களைப் பராமரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தினமானது ஒவ்வொரு ஆண்டும் மே 23 அன்று கொண்டாடப்படுகிறது.

  • ‘நான் ஆமைகளை விரும்புகிறேன்(I Love Turtles)’ என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருளாகும்.

Download PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!