ஜிப்மரில் புதிய பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசு அனுமதி – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
ஜிப்மரில் புதிதாக 786 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அனுமதியை மத்திய அரசு தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கியுள்ளதாக ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அனுமதி:
நடப்பு நிதியாண்டில் மட்டுமே ஜிப்மருக்கு மத்திய அரசு ரூ.1490.43 கோடி ஒதுக்கீடு வழங்கியுள்ளதாக தற்போது புதுச்சேரி ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும், புதிதாக பணியிடங்களுக்கும் கடந்த 10 வருடங்களுக்குப் பிறகு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அறிவித்துள்ளார். அதாவது, முன்பு இருந்த பணியிடங்களை விட இந்த ஆண்டு 17 சதவீதம் கூடுதலான பணியிடங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, மருத்துவர் காலி பணியிடங்களில் மட்டுமே பேராசிரியர் அளவில் 82 பணியிடங்களும், முதுநிலை மருத்துவர் அளவில் 70 பணியிடங்களும், இளநிலை மருத்துவர் அளவில் 100 பணியிடங்களும் நிரப்பப்பட இருக்கிறது. மேலும், 431 செவிலியர் பணியிடங்களும் 50க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுனர் பணியிடங்களும் நிரப்புவதற்கு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஜிப்மரில் சேவை கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும், மலிவான விலையில் மருந்துகளை மக்களுக்கு தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் புதுச்சேரி ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் தற்போது புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.