
மீண்டும் கூடுகிறது பாதுகாப்பு விவகார அமைச்சரவை.. எல்லை பாதுகாப்பு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்..!!
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை (22-04-2025), ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நடைபெற்ற போது, பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்தார். மேலும், தாக்குதல் தொடர்பான செய்தி அறிந்ததும் ஏப்ரல் 23 ஆம் தேதி காலை டெல்லி வந்தடைந்த அவர் விமான நிலையத்தில் இந்த பயங்கரவாத தாக்குதல் பற்றி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
பின்னர் அன்று மாலையே பிரதமர் இல்லத்தில் பாதுகாப்பு துறைக்கான மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெற்றது. அதில் ஜம்மு- காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆலோசிக்கப்பட்டு, பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு வெளியிட்டது. இந்நிலையில் “நாளை (30-04-2025) காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு துறைக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் மீண்டும் கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டத்தில் இந்திய எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது”.


























