
பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கம்…!! பின்னணியில் அதிமுகவா…? ஆட்டம் மாறும் அரசியல் ஆடுகளம்…
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த வருடம் வரவுள்ளது. இதற்காக, பல்வேறு கட்சிகளும் தற்போது இருந்தே தயாராகி வரும் நிலையில், சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவில் முக்கிய புள்ளியுமான அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதுகுறித்து பேசிய அவர், தமிழகத்தின் நலனுக்காகவும், கல்விக்கான நிதியை விடுவிக்கக்கோரியுமே பேசியதாக கூறிய நிலையில், அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அமித்ஷா பகிரங்கமாக அறிவித்தார். இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணியில் இணைய வேண்டும் எனில் சில கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அதிமுக கூறியதாகவும், தற்போது அதற்கு செவி சாய்த்து பாஜக தலைமை, தமிழக பாஜக கட்சியின் உட்கட்டமைப்பில் சில மாற்றங்களை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, தற்போதைய பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் அதிமுகவிற்கும் பல்வேறு கருத்து மோதல்கள் நிலவி வருவதை நாம் அறிவோம். இதனால், டெல்லி சென்ற எடப்பாடி, தமிழக பாஜக தலைவரை மாற்றினால் தான் கூட்டணியில் இணைவோம் என கூறியதாகவும், அதனை ஏற்று அண்ணாமலையை பாஜக தலைமை, மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சமீபத்தில் அண்ணாமலை ஒரு பேட்டியில் “அடுத்த வாரம் கூட நான் சாதாரண மனிதன் ஆகலாம்” என கூறியது மூலம் இத்தகவல் உறுதியாகியுள்ளது. அத்துடன், இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 6 ம் தேதி பிரதமர் மோதி தமிழகம் வரும் போது வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய பாஜக தலைவருக்கான போட்டியில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

























