
மகளிருக்கு இலவசமாக தையல், எம்பிராய்டரி, ஆரி ஒர்க் பயிற்சிகள்… பட்ஜெட்டில் வெளியான அசத்தலான அறிவிப்புகள்
சென்னை மாநகராட்சியின் 2025 -2026 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை சென்னை மேயர் பிரியா இன்று தாக்கல் செய்து, பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதாவது, சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு செய்தித்தாள் வாசிப்பை ஊக்குவிக்கவும், வினாடி வினா போட்டிகள் நடத்திடவும் 211 பள்ளிகளுக்கு ரூ. 86.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், சென்னையில் வளமிகு ஆசிரியர்கள் குழு அமைத்து, விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களை தேர்வு செய்து, மண்டலம் மற்றும் மாநில அளவில் போட்டிகள் நடத்திட ரூ. 62.55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள்ளதாக அறிவித்துள்ளார்.
இதையடுத்து, சென்னையில் மகளிருக்கு சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தையல், ஆரி ஒர்க், எம்பிராய்டரி மற்றும் கணினி பயிற்சிகள் இலவசமாக வழங்க ரூ. 7.5 கோடி நிதி ஒதுக்கீடும், முதியோர்களின் நலனுக்காக சென்னை சுகாதார நிலையங்களில் புதிதாக மூட்டு வலி, எலும்பு, தசை சார்ந்த பிரிவுகள் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில் தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த இன அறுவை சிகிக்சை மற்றும் வெறி நாய்க்கடி தடுப்பூசிகளை செலுத்த ரூ. 3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் வாகன நிறுத்துமிடத்தை கண்டறிய “ஸ்மார்ட் பார்க்கிங் செயலி” நடைமுறைப் படுத்தப்படும் என்றும், சென்னை மாநகராட்சிக்கு வரி செலுத்த புதிதாக “QR Code முறை” அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்

























