தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!
வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை மழை பெய்ய கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்:
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் ஓரிரு இடங்களில் கடந்த ஒரு வாரமாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இது குறித்து இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்கிழக்கு சுமார் 620 கி.மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென்கிழக்கு சுமார் 750 கி. மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
அதனால் தமிழகம் மற்றும் புதுவையின் சில இடங்களில் ஜன. 30 மற்றும் 31ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி அன்று கன்னியாகுமரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதே போல பிப். 2 , 3 ம் தேதிகளில் தமிழகத்தின் தென் மற்றும் கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். வங்க கடல், இலங்கை தமிழக கடலோர பகுதிகளில் ஜன. 30,31 மற்றும் பிப். 01, 02 ஆகிய தேதிகளில் சூறாவளி காற்று 45 கி.மீ முதல் 65 கி. மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும், அதனால் மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.