“யார் அந்த சார்..? குணசேகரனுடன் பேசியது யார்..?” அண்ணா பல்கலைகழக மாணவி வழக்கில் புதிய திருப்பம்..!!
கடந்த 23ம் தேதியன்று அண்ணா பல்கலைகழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு முக்கிய பகுதியில், நடந்த இவ்வாறான சம்பவத்திற்கு பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து, இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
மேலும், அம்மாணவி அளித்த புகாரில், “குணசேகரன் தன்னை துன்புறுத்திய பின்பு, அவனுக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், அப்பொழுது அந்த அழைப்பில் தன்னை மிரட்டி விட்டுவிடுவதாக அவரிடம் கூறியதாகவும், பிறகு, அந்த சார் உடனும் நீ சிறிதுநேரம் இருக்க வேண்டும் என தன்னை மிரட்டியதாகவும்” கூறி இருந்தார். இந்நிலையில், யார் அந்த சார்…? என நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர், “குற்றவாளி குணசேகரனுடன் மற்றொருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதை பொறுத்தவரை, குற்றவாளியின் போன் அழைப்புகளை சரிபார்த்த பொழுது , அவரது செல்போன் Airplane Mode-ல் இருந்ததாகவும், தனக்கு பின் ஒரு பெரிய குழு இருப்பதாக காட்டுவதற்காக போனில் பேசுவது போல குற்றவாளி குணசேகரன் நடித்துள்ளார்” என அரசு தலைமை வழக்கறிஞர் கூறியுள்ளார். மேலும், இது யாரையோ காப்பாற்ற அரசு செய்யும் சதி என மக்கள் கூறி வருகின்றனர்.



























