தமிழக இருசக்கர வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – காவல் ஆணையாளரின் விழிப்புணர்வு!
தமிழகத்தில் போக்குவரத்து காவல்துறை சார்பில், தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியும், விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டும், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழக வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம்:
தற்போதைய அவசர உலகில், நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. மறுபுறம் வாகன விபத்துகளும் அதிகரிக்கின்றன. இதனால் பலர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதே உயிரிழப்புக்கு காரணமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்பவரும், பின்னிருக்கையில் அமர்ந்து இருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது கட்டாய உத்தரவு உள்ளது. மேலும் ஹெல்மெட் அணிவதால், பலரின் உயிர் பாதுகாக்கப்படுகிறது. ஹெல்மெட் அணிவது ஒவ்வொருவரின் கடமை என்பதை வாகன ஓட்டிகள் உணர வேண்டும்.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – KYC புதுப்பிப்பு! நிர்வாகம் எச்சரிக்கை!
சென்னையில், தலைக்கவசம் அணிவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை அருகில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், இருசக்கர வாகன விபத்துகளில் ஏற்படும் அதிகமான உயிரிழப்புகள் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படுவது குறித்தும், இருசக்கர வாகனங்களில் ஓட்டுநர் மற்றும் பின்னிருக்கையில் அமர்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் கையெழுத்து முகாமில், தலைக்கவசம் கட்டாயம் அணிவோம் என உறுதிமொழி மேற்கொண்டு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கையெழுத்திட்டனர்.அத்துடன், காவல் ஆணையர் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகள் கூறி, இலவசமாக தலைக்கவசங்கள் வழங்கினார். இந்த விழிப்புணர்வு முகாம் தொடர்ந்து 5 நாட்கள், 5 முக்கிய சிக்னல் சந்திப்புகளில் நடத்தப்படும் என்று காவல் ஆணையர் தெரிவித்தார்.
சென்னையில் கடந்த 23.05.2022 முதல் 05.07.2022 வரையில் மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனையில், இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் வந்த 72,744 பேர் மீதும், பின்னிருக்கையில் தலைக்கவசம் அணியாமல் வந்த 63,912 நபர்கள் மீதும் என மொத்தம் 1,36,656 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூபாய் 1,36,65,600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.