தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியானவர்களின் பட்டியல் – ஆட்சியர் விளக்கம்!
5 சவரனுக்கும் குறைவாக கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்திருக்கும் ஏழை எளிய மக்களில் நகைக்கடன் தள்ளுபடி பெற இருப்போரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் மனு அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நகைக்கடன் தள்ளுபடி:
தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது 5 சவரனுக்கு குறைவாக அடகு வைத்திருக்கும் ஏழை எளிய மக்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த நகைக்கடன் தள்ளுபடியில் சில முறைகேடுகள் நடைபெற்றதால் இந்த தள்ளுபடியில் சில நிபந்தனைகள் புகுத்தப்பட்டது. அதாவது வீட்டில் ஒருவருக்கு மட்டுமே இந்த நகைக்கடன் தள்ளுபடி கொடுக்க முடியும் எனவும், ஏற்கனவே பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கு கொடுக்க முடியாது எனவும், அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இத்தகைய தள்ளுபடி கிடையாது எனவும் நிபந்தனைகள் புகுத்தப்பட்டது.
தமிழகத்தில் மீண்டும் அமலாகும் ஊரடங்கு? சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!
இத்தகைய அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்பட்டவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 13.37 லட்ச ஏழை எளிய மக்கள் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி பெற தேர்வாகியுள்ளனர். இந்நிலையில் 4,450 கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் அடகு வைத்த நகைகள் மக்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டு திரும்ப வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரனுக்கு குறைவாக அடகு வைத்திருந்து நகைக்கடன் தள்ளுபடி பெற தேர்வானவர்களுக்கு தள்ளுபடி சான்றிதழ் மற்றும் அவர்களுடைய நகைகள் திரும்ப வழங்கப்பட்டு வருகிறது. மேலும், நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியானவர்கள் மற்றும் தகுதி இல்லாதவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் பட்டியல் வெளியிடப்பட்ட அடுத்த 30 நாட்களுக்குள் அரியலூர் சரக துணைப்பதிவாளரிடம் மேல்முறையீட்டு மனு அளித்து தீர்வு காணலாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.