இனி ஆண்டுக்கு 15 சிலிண்டர் மட்டுமே வாங்க அனுமதி…அதிரடி கட்டுப்பாடுகளால் மக்கள் அதிர்ச்சி
வீடுகளில் சிலிண்டர் பயன்படுத்துபவர்கள், பொதுவாக ஒன்று அல்லது இரண்டு இணைப்புகள் வைத்திருக்கின்றனர். அதிலும், இரண்டு இணைப்பு வைத்திருப்பவர்கள் ஒரு சிலிண்டர் இருக்கும் போதே மற்றொரு சிலிண்டருக்கு பதிவு செய்கின்றனர். ஆனால், ஒரு சிலிண்டர் இணைப்பு வைத்திருப்பவர்கள், அது முழுமையாக தீர்ந்தவுடன் மற்றொன்றிற்கு பதிவு செய்கின்றனர். மேலும், மத்திய அரசு ஆண்டிற்கு மொத்தம் 12 சிலிண்டருக்கு மட்டுமே மானிய தொகையை அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தி வருகிறது.
இந்நிலையில், ஆண்டிற்கு 15 சிலிண்டர்கள் பயன்படுத்தி, அதற்கு மேல் பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் எஸ்எம்எஸ் ஒன்றை அனுப்பு வருவதாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, “அன்புள்ள வாடிக்கையாளர்களே, உங்கள் சமையல் கேஸ் சிலிண்டர் பதிவை ஏற்க முடியாது”. ஏனெனில், “நீங்கள் ஆண்டு ஒதுக்கீடான 213 கிலோவை பயன்படுத்தி விட்டீர்கள்” என்று எஸ்எம்எஸ் அனுப்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், எரிவாயு சிலிண்டர் வீட்டிற்கு பயன்படுத்தப்படுகிறதா அல்லது வேறு ஏதேனும் முறைகேடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்டுபிடிக்க இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், கூடுதல் சிலிண்டர் தேவைப்படுபவர்கள் கேஸ் ஏஜென்சியிடம் முறையிட்டால், வாங்கி கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.


























