குடியரசுத்துணைத் தலைவரின் இரண்டு ஆண்டுகாலப் பணியை ஆவணப்படுத்தும் நூலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிடுகிறார்
குடியரசுத்துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு அவர்களின் இரண்டு ஆண்டுகாலப் பணியை ஆவணப்படுத்தும் நூலை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா சென்னையில் கலைவாணர் அரங்கில் ஞாயிறன்று (11.08.2019) நடைபெறும் விழாவில் வெளியிடுகிறார்.
மத்திய சுற்றுச்சூழல் & வனங்கள் & பருவநிலை மாற்றம் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறைகளுக்கான அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளார். “கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்” என்ற தலைப்பிலான இந்த நூல், கடந்த இரண்டு ஆண்டுகளாக குடியரசுத்துணைத் தலைவர், நமது நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கலந்து கொண்ட 330 பொது நிகழ்ச்சிகள் தொடர்பான தகவல்களை ஆவணப்படுத்துகிறது.
நமது நாட்டின் குறுக்கும் நெடுக்கும் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் பயணம் செய்த குடியரசுத்துணைத் தலைவர், 61 பட்டமளிப்பு உரைகளை நிகழ்த்தியுள்ளார். 35 நிகழ்ச்சிகளில் மாணவர்களுடன் கலந்துரையாடியுள்ளார். 97 அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு வருகை தந்துள்ளார். 25 சிறப்பு சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார்.
திரு. வெங்கய்யா நாயுடு மேற்கொண்டுள்ள முக்கியமான அரசு ரீதியிலான அயல்நாட்டுப் பயணங்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்தும் இந்நூல் எடுத்துரைக்கிறது. இதில் நான்கு கண்டங்களில் உள்ள 19 நாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்களும் அடங்கும். பனாமா, கவுதிமாலா, கோஸ்டரிக்கா, மால்டா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய குடியரசுத்துணைத் தலைவர் இவர்தான்.
மாநிலங்களவைத் தலைவராக இவரின் சாதனைகளையும், மாநிலங்களவையின் செயல்திறனையும், ஆற்றலையும் உயர்த்துவதற்கான இவரின் முன்முயற்சிகளையும் இந்த நூல் எடுத்துரைக்கிறது.
இந்த விழாவில், தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் திரு எடப்பாடி கே பழனிசாமி, துணை முதலமைச்சர் திரு ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
வேளாண் விஞ்ஞானி பேரா.எம்.எஸ்.சுவாமிநாதன், இஸ்ரோ-வின் முன்னாள் இயக்குநர் டாக்டர் கிருஷ்ணசுவாமி கஸ்தூரிரங்கன், முன்னாள் அட்டார்னி ஜெனரல் திரு கே.பராசரன், துக்ளக் ஆசிரியர் திரு சுவாமிநாதன் குருமூர்த்தி, அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் டாக்டர் பி சி ரெட்டி, வி.ஐ.டி. நிறுவனரும் வேந்தருமான டாக்டர் ஜி விஸ்வநாதன், இந்திய பாட்மிண்டன் குழுவின் தலைமை பயிற்சியாளர் திரு புல்லேலா கோபிசந்த் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்கின்றனர்.