தமிழகத்தில் இன்றும் வெளுத்துவாங்க போகும் கனமழை – வானிலை மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் இன்றும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
கனமழை :
தமிழகத்தில் கோடை வெயில் ஆரம்பித்த முதல் வாரத்தில் இருந்தே தொடர்ந்து மழை பொழிவு இருந்து வருகிறது. தற்போது தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்குகளின் கிழக்கு திசை மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பதன் காரணமாக நகரின் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஆனால், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த 24 மணி நேரமாகவே வறண்ட வானிலை நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
மேலும், தமிழகத்திலேயே ஈரோடு மற்றும் கரூர் பகுதிகளில் தான் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே பெய்து வரும் கனமழையின் காரணமாக தர்மபுரி, ஈரோடு, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ்வரையிலும் வெப்பம் குறைந்துள்ளதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
Follow our Instagram for more Latest Updates
இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று தென்கிழக்கு வங்கக்கடலை ஒட்டிய தென்மேற்கு கடல் பகுதிகளில் 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதனால் மீனவர்கள் இந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.