ஏப்ரல் 7 வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசின் அதிரடி உத்தரவு!
ராஜஸ்தான் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பராமரிக்க உடனடியாக அங்கு கூடுதல் போலீஸ் படை அனுப்பப்பட்டுள்ளதுடன், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார். கரௌலியில் ஊரடங்கு உத்தரவை வரும் 7 ஆம் தேதி வரை நீட்டித்து, அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
ஊரடங்கு அமல்:
ராஜஸ்தான் மாநிலத்தில், புத்தாண்டின் முதல் நாளான நேற்று நவ சம்வத்ஸர் விழா நடைபெற்றது. கரெளலியில் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் இந்து சமூகத்தினர் நடத்திய இருசக்கர வாகன ஊர்வலம் நடத்தினர். அப்போது முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கரெளலி பகுதிக்கு வந்த போது இந்துக்களின் ஊர்வலத்தின் மீது அடையாளம் தெரியாத சிலர் கற்களை எரிந்து தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கு மோதல் ஏற்பட்டதால் வன்முறையில் இருசக்கர வாகனங்கள், கடைகளுக்குத் தீ வைக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் கலவரம் வெடித்தது. இந்த மோதலில் 35 போ் காயம் அடைந்தனர். இதனால் மாவட்டத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
1 முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – விடுமுறை நாட்கள் ஒத்திவைப்பு!
கரௌலியில் ஏப்ரல் 2ஆம் தேதி மாலை 6.30 மணி முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் மத ஊர்வலத்தின் போது ஏற்பட்ட மோதலால் அந்த பகுதியில் அதிக பரபரப்பு நிலவி வருகிறது. அந்த சம்பவத்தில் ஈடுபட்ட 46 பேரை ராஜஸ்தான் காவல் துறை கைது செய்தது. மேலும் இது தொடர்பாக விசாரிக்க ஏழு பேரை விசாரணைக்காகக் காவலில் வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் ஞாயிற்றுக்கிழமை மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், மக்களின் நலன் கருதி வன்முறையைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவை வரும் 7 ஆம் தேதி வரை நீட்டிக்க உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்த உத்தரவு காரணமாக பொதுமக்கள் யாரும் வெளியே வராமல் பகுதியே வெறிச்சோடி காணப்படுகிறது. பொதுமுடக்கம் மட்டும் இல்லாமல் கரெளலியில் மறு உத்தரவு வரும் வரை இணையதள சேவை முடக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே இந்த வன்முறைக்கு காரணமாகக் கருதப்படும் சுயேச்சை கவுன்சிலர் மட்லூம் அகமது என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை அடையாளம் காண காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். அமைதி காக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறினார்.