TNPSC பாடக்குறிப்புகள் – தேர்தல் ஆணையம்

0

தேர்தல் ஆணையம்

தேர்தல்கள் நாட்டின் ஒவ்வொரு வயது வந்த குடிமகனுக்கும் அரசாங்க உருவாக்கச் செயல்முறையில் பங்கேற்பதற்கு வாய்ப்பைத் தருகின்றன. தேர்தல் என்பது பல கூறுகள் ஒன்றிணைந்த ஒரு செயற்பாடு. அது கால அட்டவணைகள், விதிகள் மற்றும் அரசு இயந்திரத்தை ஈடுபடுத்துவதாக அமைகிறது.

இந்தியாவின் தேர்தல் ஆணையம்

  • இந்தியாவின் அரசியல் சட்டம், இந்தியாவுக்கான ஒரு தேர்தல் ஆணையத்தை வழங்கியிருக்கிறது. அது எல்லாத் தேர்தல்களையும் நெறிப்படுத்தி கண்கானிப்புப் பணியையும் – கட்டுப்படுத்துதலையும் மேற்கொள்ளுவதற்குப் பொறுப்பான அமைப்பாகும்.
  • குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர் பதவிகள் மற்றும் நாடாளுமன்றத்தில் இரு அவைகள் மற்றும் மாநிலங்களின் சட்டமன்றப் பேரவைகள் – ஆகிய அனைத்திற்குமான தேர்தல்களை நடத்துவதற்கு இது பொறுப்பு வகிக்கும் அமைப்பாகும்.
  • அதோடு கூட வாக்காளர்களின் பட்டியல்களைத் தயாரித்தல், மீளாய்வு செய்தல், அண்மைக்காலத் தரவுகளை இணைத்தல் மற்றும் அப்பட்டியல்களைப் பராமரித்தல் போன்ற பணிகளுக்கும் இவ்வமைப்பே பொறுப்பாகும்.
  • நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றப் பேரவைகளுக்கான தேர்தல்களுக்காக தொகுதிகளின் எல்லைகளை வரையறுத்தல், தேர்தல் நிகழ்வுத் திட்டத்தை நிர்ணயித்தல் மற்றும் தேர்தல் தகராறுகளைத் தீர்த்து வைத்தல் – போன்ற பணிகளை நிறைவேற்றும்.
  • தேர்தல் தொடர்பான வேறு பல செயல்பாடுகளையும் இது நிறைவேற்றுகிறது.

பதவிக் காலமும், பதவி நீக்கமும்

  • தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் ஆகியோர் ஆறு வருட காலத்திற்கு அல்லது அவர்கள் 65 வயதை எட்டும் வரை – இதில் எது முன்னதாக வருமோ அதுவரை – பதவி வகிக்கும் வகையில் நியமானம செய்யப்படுகின்றனர்.
  • இதில் முக்கியமானது தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றம் பிற தேர்தல் ஆணையர்கள் அனைவரும் எல்லாவிதமான அரசியல் குறுக்கீடுகளிலிருந்தும் விடுவிக்கப் பட்டவர்களாளக – சுதந்திரமானவர்களாக இருக்க வேண்டியது கட்டாயமாகும்.
  • ஆகவே அவர்கள் குடியரசுத் தலைவர்களால் நியமிக்கப்பட்ட போதிலும் கூட அவர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கு குடியரசுத் தலைவரால் முடியாது. மேலும் அவர்களுடைய நியமனத்திற்குப் பின்னர் தேர்தல் ஆணையர்களின் பதவிக் காலம் மற்றும் பணி நிலைமைகளில் எந்தவித மாற்றங்களையும் செய்ய முடியாது.
  • தலைமைத் தேர்தல் ஆணையரை சாதாரணமாகப் பதவியிலிருந்து நீக்கிவிட முடியாது. உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பதவி நீக்கம் செய்வதற்குரிய காரணங்கள் மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றின் அடிப்படைகளின் மீது தவிர வேறு எவ்வகையிலும் தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்க முடியாது.
  • எப்படியிருப்பினும் இதர தேர்தல் ஆணையர்களும், மண்டல தேர்தல் ஆணையர்களும் தலைமைத் தேர்தல் ஆணையரின் கீழ்தான் பணியாற்றுகிறவர்கள் என்பதால் அவரது பரிந்துரைகளின் பேரில் குடியரசுத் தலைவரால் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட முடியும்.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களும், கடமைகளும்

  • இந்தியாவில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதுதான் தேர்தல் ஆணையத்தின் முதன்மையான கடமையாகும். இந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு கடமைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது.
  • தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நிமித்தமான உறுப்பினர் ஆகவும்ää பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற ஐந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பிற உறுப்பினர்களாகவும் கொண்டுள்ள ஒரு தொகுதி மறுவரையறை ஆணையத்தால் பொதுவாக தொகுதிகள் மறுவரையறை செய்யப்படுகின்றன.
  • தொகுதி மறுவரையறை ஆணையத்திற்குத் தேவையான அனைத்து செயலக உதவிகளும் (தேசிய, மாநில, மாவட்ட – எல்லா மாவட்டங்களிலும்) தேர்தல் ஆணையத்தினால் வழங்கப்படுகின்றன. தொகுதி மறுவரையறை ஆணையம் காலத்திற்குக் காலம் அரசாங்கத்தினால் நிறுவப்படுகிறது.

வாக்காளர் பட்டியல்கள் தயாரித்தல்

  • ஒவ்வொரு தொகுதியும் ஒரு முழுமையான வாக்களர் பட்டியலைக் கொண்டுள்ளது. அது ‘எலெக்டோரல் ரோல்’ அல்லது வாக்காளர்களின் பட்டியல் என அறியப்படுகிறது.
  • நாடாளுமன்றத் தேர்தல்களுக்கும், அதே போல சட்டமன்றப் பேரவைத் தேர்தல்களுக்கும் உரிய வாக்காளர் பட்டியல்களைத் தேர்தல் ஆணையம் தயாரிக்கிறது.
  • ஒவ்வொரு தொகுதியின் வாக்களர் பட்டியலும், அந்தத் தொகுதியில் வாக்களிக்கும் உரிமை பெற்ற எல்லா நபர்களின் பெயர்களையும் கொண்டுள்ளதாக இருக்கும்.
  • இந்த வாக்களர் பட்டியலும் காலத்திற்குக் காலம் பொதுவாக ஒவ்வொரு பொதுத்தேர்தல், இடைத்தேர்தல் மற்றும் இடைக்காலத் தேர்தல் ஆகியவை அத்தொகுதியில் நடைபெறுவதற்கு முன்னதாக மறு சீராய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

அரசியல் கட்சிகளின் அங்கீகாரம்

  • தேர்தல் ஆணையத்தின் மிக முக்கியமான கடமைகளுள் ஒன்று, அரசியல் கட்சிகளுக்கு அகில இந்திய அளவிலும் (தேசியக் கட்சிகள்) அல்லது மாநில அளவிலும் (பிராந்தியக் கட்சிகள்) செயல்பட்டு வருகிற அரசியல் கட்சிகள் என்று அங்கீகாரம் வழங்குவதாகும்.
  • ஒரு பொதுத் தேர்தலில் ஏதேனும் நான்குமாநிலங்களில் பதிவான மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் நான்கு சதவீத வாக்குகளை ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி பெறும் பட்சத்தில் அது ஓர் அகில இந்திய (தேசிய)க் கட்சியாக அங்கீகரிக்கப்படுகிறது.
  • ஒரு மாநிலத்தில் பதிவான மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் நான்கு சதவீத வாக்குகளை ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி பெறும் பட்சத்தில்ää அது ஒரு மாநில அல்லது பிராந்தியக் கட்சியாக அங்கீகரிக்கப்படுகிறது.

சின்னம் ஒதுக்கீடு செய்தல்

அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்தினால் ஒதுக்கீடு செய்யப்படுகிற தேர்தல் சின்னங்களைப் பெற்றிருக்கின்றன. இந்தச் சின்னங்கள் பின்வரும் காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகின்றன.
1. போட்டியிடுகிற வேட்பாளர்களின் பெயர்களைப் படித்தறிய முடியாத எழுத்தறிவு பெற வாய்ப்பில்லாமற் போன வாக்காளர்களுக்கு இவை உதவிகரமாக அமையும்.
2. இரண்டு வேட்பாளர்கள் ஒரே பெயரைக் கொண்டவர்களாக இருக்கும் பட்சத்தில் அவ்விருவரையும் வேறுபடுத்திப் பிரித்தறிய இவை உதவிகரமாக இருக்கும்.

தேர்தல் நடத்தும் செயல்முறை

இந்தியாவில் தேர்தல்கள் சட்டத்தினால் வரையறுத்துத் தரப்பட்டிருக்கும் விதிமுறைப்படி நடத்தப்படுகின்றன. பின்வரும் செயல்முறை அனுசரிக்கப்படுகிறது.

தேர்தலுக்கான அறிவிப்பு

  • தேர்தல்களின் செயல்முறை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவது எப்போது என்றால் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் மக்களவைக்குத் தேர்தல் எனும் போது குடியரசுத் தலைவரும் மாநில சட்டமன்றப் பேரவைக்குத் தேர்தல் எனும் போது ஆளுநரும் தேர்தலுக்கான ஓர் அறிவிப்பை வெளியிடுகிற போதுதான். வேட்பு மனுக்களைத் தாக்கல் செயவதற்கு வேட்பாளர்களுக்கு ஏழு நாட்கள் கால அவகாசம் தரப்படுகிறது.
  • அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு வருகிற ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்த ஏழாவது நாள் வேட்புமனுத் தாக்கல் செய்ய இறுதி நாளாகும். வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான இறுதி நாளுக்கு அடுத்த நாள் சாதாரணமாக வேட்பு மனுக்களின் பரிசீலனை நடைபெறும் நாளாகும்.
  • வேட்பாளர்கள் வேட்பு மனுக்களின் பரிசீலனைக்குப் பிறகு வருகிற இரண்டாவது நாளன்று தமது வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். வேட்புமனு திரும்பப் பெறப்பட்ட நாளிலிருந்து வருகிற இருபதாவது நாளுக்கு முன்பாக தேர்தல் நடத்தப்பட மாட்டாது.

வேட்பு மனுத்தாக்கல்

  • தேர்தலில் போட்டியிட விரும்புகிற ஒருவர் அதற்கான வரையறுக்கப்பட்ட ஒரு படிவத்தில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவேண்டும்.
  • அவருடைய பெயர், வயது, அஞ்சல் முகவரி மற்றும் வாக்காளர் பட்டியலில் தனது வரிசை எண் – ஆகியவற்றைக் குறிப்பிட்டு அந்த மனுவில் தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • சம்பந்தப்பட்ட தொகுதியின் வாக்காளர்களுள் குறைந்தபட்சம் இரண்டு பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், குறிப்பிட்ட வேட்பாளரை முன்மொழியவும், வழிமொழியவும் வேண்டும். ஒவ்வொரு வேட்பாளரும் ஓர் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது பிரமாண ஒப்புதலைத் தெரிவிக்க வேண்டும்.
  • இவ்வேட்பு மனுக்கள் பிறகு தேர்தல் ஆணையத்தினால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன.

காப்புத்தொகை செலுத்துதல்

ஒவ்வொரு வேட்பாளரும் வேட்புமனுத் தாக்கல் செய்யும் போதே காப்புத் தொகையையும் செலுத்தியாக வேண்டும். வேட்பாளர் மொத்தம் பதிவான செல்லுபடியாகத்தக்க வாக்குகளில் குறைந்தபட்சம் ஆறில் ஒரு பங்கு வாக்குகளையாவது பெறாமற் போகும் பட்சத்தில் அவர் தனது காப்புத் தொகையை இழக்க நேரிடும்.

வேட்புமனுப் பரிசீலனையும், திரும்பப்பெறுதலும்

  • தேர்தல் அதிகாரியால் பெறப்பட்ட எல்லா வேட்பு மனுக்களும் தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு நாளில் பரிசீலனை செய்யப்படும்.
  • வேட்பு மனுக்களின் பரிசீலனை முடிந்த பிறகு வருகிற இரண்டாவது நாள், வேட்பாளர்கள் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளுவதற்கான இறுதி நாளாகும். ஒருவேளை அந்த நாள் விடுமுறை நாளாகவோ அல்லது ஞாயிற்றுக் கிழமையாகவோ அமைந்து விட்டிருக்கும் பட்சத்தில்ää அதற்கு உடனடி அடுத்த நாளே வேட்பு மனுக்களைத் திரும்பப்பெறக் கடைசிநாள் ஆகும்.

தேர்தல் பிரச்சாரம்

ஒரு வேட்பாளர், மற்ற வேட்பாளர்களைக் காட்டிலும் வாக்காளர்கள் தன்னையே தேர்ந்தெடுத்து வகாக்ளிக்கும் வகையில் அவர்களைத் தனக்குச் சாதகமாகத் திருப்ப முயற்சி செய்யும் செயல்முறையே தேர்தல் பிரச்சாரமாகும். வாக்குப்பதிவு நாளுக்கு 48 மணிநேரம் முன்னதாக பிரச்சாரம் நிறுத்தப்பட்டு விடும்.

வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகளை அறிவித்தல்:

  • வாக்குப்பதிவை நடத்துவதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் பெரும் எண்ணிக்கையிலான வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு வாக்குச் சாவடியும், தலைமை வாக்குப் பதிவு அலுவலரின் கீழ் வாக்குப்பதிவு அலுவலர்களுடன் வாக்குப்பதிவு செய்யும் செயல்முறைக்கு உதவி செய்வதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • ஆண் ஃ பெண் வாக்களர்கள் தமது வாக்குகளை மறைவான ஒரு பகுதியினுள் உள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்கின்றனர்.
  • எனவே அவர்கள் யாருக்கு வாக்களிக்கத் தேர்வு செய்தனர் என்பதை வேறு எந்த ஒரு நபரும் தெரிந்து கொள்ள முடியாது. இது இரகசிய வாக்குப்பதிவு என்று அறியப்படுகிறது.
  • வாக்குப்பதிவு முடிவடைந்ததும், வேட்பாளர்களுடைய முகவர்கள் முன்னிலையில் வாக்குப் பெட்டிகள் ஃ இயந்திரங்கள் மூடப்பட்டு முத்திரை இடப்படுகின்றன.
  • வாக்குப்பதிவுக்கென குறிப்பிட்ட நேர வரம்பிற்குள் வாக்குச் சாவடிக்கு வந்து விடுகிற எந்த ஒரு வாக்காளரும், அவரது வாக்கைப் பதிவு செய்யும் உரிமை பாதிக்கப்பட்டவராகி விடாமல் வாக்கைப் பதிவு செய்யும் உரிமை மறுக்கப்பட்டவராகி விடாமல் முகவர்கள் உறுதி செய்வார்கள்.

இந்திய தேர்தல் முறையின் பலவீனங்கள்

  • சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்வதள்குத் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் முயற்சிகள் ஒருபுறமிருப்பினும்.
  • நமது தேர்தல் முறையில் சில பலவீனங்கள் கீழே விவாதிக்கப்படுகின்றன: பின்வரும் பிரச்சனைகள் இங்குள்ளன:
    1. தேர்தல்களில் நியாயமற்ற நடைமுறைகளைப் பின்பற்றுதல் – போலியான, மோசடியான வாக்குப்பதிவு, ஆள்மாறாட்டம் செய்தல் போன்றவை.
    2. தேர்தல்களின் போது வன்முறை:
    3. பண பலமும், படை பலமும் மோசமான பாத்திரம் வகிக்கின்றன.
    4. வாக்காளர்களை குறிப்பாக பலவீனமான பிரிவுகளைச் சேர்ந்த மக்களை மிரட்டுதல்
    5. அரசாங்க எந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல்.
    6. வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுதல் மற்றும் தேர்தல்கள் – அரசியல் இரண்டும் குற்றமயமாகிக் கொண்டு வருதல். – இவை நமது உடனடி கவனத்தைக் கோருபவை.

ஆலோசனைகளாக முன் வைக்கப்படும் சீர்த்திருத்தங்களின் உத்தேசமான பட்டியல் பின்வருமாறு:

1. மாறிவரும் காலங்களுக்கு ஏற்ப தேர்தல் அமைப்பு முறையை வைத்திருப்பதற்கு காலத்திற்குக் காலம் தேர்தல் நடைமுறைகளை ஜனநாயக மயமாக்கி வர வேண்டும்.
2. தற்போது நடைமுறையிலிருக்கும் தேர்தல் முறையில் மாற்றம் செய்வது (பன்முக நடைமுறை) – பெற்ற வாக்குகள் – தொகுதிகள் இடையே சமச்சீரற்ற நிலை ஏற்படுவதைக் குறைப்பதற்கு விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ அடிப்படையிலான ஒரு மாற்று வடிவத்திற்கு மாற்றம் செய்வது.
3. அரசியல் கட்சிகள் வெளிப்படையான மற்றும் ஜனநாயகப்பர்வ முறையில் செயல்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் அவற்றின் செயல்பாடுகள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். தேர்தல்களின் போது அவை செலவு செய்யும் செலவினங்களைத் தணிக்கை செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
4. தேர்தல் தொடர்பான சட்டங்கள் இன்னும் அதிக கண்டிப்பும் – உறுதியுமிக்கவையாக இயற்றப்பட வேண்டும். கடுமையான தண்டனைகளை விதிப்பதற்கேற்ற விதிகள் அவற்றில் இடம் பெற வேண்டும்.
5. தேர்தல் செலவினங்களை அரசே ஏற்று நடத்தும் முறையை அறிமுகம் செய்வதன் மூலம் தேர்தல் செலவினங்களைக் குறைக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும்.
6. நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றப் பேரவையிலும் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கான பிரதிநிதித்துவம் இருப்பதை உறுதி செய்யும் வகையில் சிறப்பு விதி வகுக்கப்பட வேண்டும்.
7. தேர்த்ல்களின் போது ஆள் பலமும், பண பலமும் வகிக்கும் பாத்திரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
8. தேர்தல்களில் அரசியல் குற்றமயமாக்கப் படுவது நிறுத்தப்பட வேண்டும்.
9. குற்றம் பின்னணியுள்ள குற்றவியல் வழக்குகளில் பதிவாகியுள்ள வேட்பாளர்கள் தேர்தல்களில் போட்டியிட முடியாதவாறு தடை செய்யப்பட வேண்டும்.

PDF Download

TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் Download

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

TNPSC Group 2 பாடக்குறிப்புகள் PDF Download

WhatsApp Group – ல் சேர –  கிளிக் செய்யவும்

Facebook  – ல் சேர கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!