தமிழகத்தில் அதிகரித்து வரும் நாய்க்கடி சம்பவங்கள்.. முதலமைச்சர் பிறப்பித்த முக்கிய உத்தரவு..!!
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக தெரு நாய்களால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தன. எனவே தெரு நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 5 முக்கிய உத்தரவுகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்தார்.
அதன்படி “அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் நாய்கள் கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் அதன் விரிவாக்க மையங்களில் கருத்தடை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், உடல்நலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை மீட்டு சிகிச்சை அளிக்க காப்பகங்களை உருவாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்”.


























