தனியார் துறை மூலம் மின்வாரிய பராமரிப்பு ஊழியர்களை தேர்வு செய்யும் உத்தரவு ரத்து – அமைச்சர் தங்கமணி அறிக்கை!!
தமிழக மின்வாரிய பராமரிப்பு பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் உரிமை வழங்கப்பட்டுள்ளதாக வெளியிட்ட அறிக்கையை எதிர்த்து மின்சார வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் தற்போது மின்வாரிய பராமரிப்பு பணிகளுக்கான தனியார் ஒப்பந்தம் அடிப்படையிலான அறிக்கையை ரத்து செய்வதாக மின்துறை அமைச்சர் தங்கமணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் தங்கமணி அறிவிப்பு:
மின்வாரிய பராமரிப்பு பணிகளுக்கான 30 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப தனியார் நிறுவங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் உரிமை வழங்கப்பட்டுள்ளதாக மின்சாரவாரிய கண்காணிப்பு பொறியாளர் அறிக்கை வெளியிட்டார். இதன்படி தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்கள் 3 வருடம் வேலை செய்யலாம் எனவும் அதற்கான நிதியையும் ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகும், மேலும் வேலை நிரந்தரம் இல்லாமல் போய்விடும் என்பதாலும், மேலும் இத்திட்டத்தினால் லஞ்சம் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும். இந்த திட்டத்தை எதிர்த்து மின்வாரிய ஊழியர்கள் கோவை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகத்திலும், சென்னையில் மின்வாரிய தலைமை அலுவலகத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தின் 3 வாயில்களும் மின்வாரிய ஊழியர்களால் முற்றுகையிடப்பட்டது.
தனியார் மூலம் நிரப்பப்படும் 30 ஆயிரம் காலிப்பணியிடங்கள் – மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்!!
இந்நிலையில் தற்போது தமிழக மின்வாரியத்திற்கான தனியார் மூலம் 30 ஆயிரம் பேரை நியமிக்கும் உத்தரவை ரத்து செய்யப்படுவதாக தமிழக மின்துறை அமைச்சர் தெரிவித்தார். அதே நேரத்தில் மின்வாரிய சங்கத்தின் சார்பாக தொடரப்பட்டுள்ள வழக்கை நாளையே திரும்ப பெற்றால், மின்வாரியத்தில் 10 ஆயிரம் ஊழியர்களை நாளையே பணியில் அமர்த்துவதாக தெரிவித்தார். இந்த செய்தியை அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.