டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை: முக்கிய அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை தொடர்பாக அமைச்சர் விக்னேஷ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் விடுமுறையும், இரண்டு நாட்கள் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு
டாஸ்மாக் பணியாளர்களின் ஊதியமும் உயர்த்தப்பட உள்ளது. மேற்பார்வையாளர்களுக்கு ரூ.33,023, விற்பனையாளர்களுக்கு ரூ.30,284, உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.28,689 என உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை முன்பணம்
ஊழியர்களுக்கு ரூ.20,000 பண்டிகை முன்பணம் வழங்கப்படும். மேலும், ஆண்டுக்கு மூன்று சீருடைகளுக்கான துணி மற்றும் தையல் செலவாக ரூ.6,000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
8 மணி நேர பணி
டாஸ்மாக் ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் 8 மணி நேர பணி ஒதுக்கீடு செய்யப்படும். ஊழியர்களின் பணிச்சூழல் மற்றும் நலனை மேம்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு, பணி நேர சலுகை, விடுப்பு மற்றும் பண்டிகை முன்பணம் உள்ளிட்ட அறிவிப்புகள் டாஸ்மாக் ஊழியர்களுக்கு முக்கிய நலத்திட்ட நடவடிக்கைகளாக பார்க்கப்படுகின்றன.



























