
பயணிகளுக்கு ஒரு நற்செய்தி.. புதிய பேருந்துகளை தொடங்கி வைத்த தமிழக முதல்வர்.. எந்தெந்த மாவட்டத்திற்கு என்று தெரியுமா..??
தமிழ்நாட்டில் உள்ள சாமானிய மக்களுக்கு பொதுப் போக்குவரத்துச் சேவைகளை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வாயிலாக, குறைந்த கட்டணத்தில் அரசு வழங்கி வருகிறது. மேலும், பொது மக்களின் அத்தியாவசிய தேவைக்கேற்ப புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தல், பழைய பேருந்துகளை புதுப்பித்தல், பணிச்சுமையை குறைக்கும் விதமாக நவீன இயந்திரங்கள் அறிமுகப்படுத்தல் போன்ற பல்வேறு திட்டங்களையும் அவ்வப்போது செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று நான்காண்டு நிறைவடைந்த நிலையில் ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, இன்று (07-05-2025) சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில், 214 புதிய பேருந்துகளின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். அதன்படி சென்னை தீவுத்திடல் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு – 27, விழுப்புரம் – 114, கோயம்புத்தூர் – 31, மதுரை – 14, திருநெல்வேலி – 18 மற்றும் சேலம் – 10 என மொத்தமாக 214 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த 214 புதிய பேருந்துகளில், “மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்காக” 70 நகரப் பேருந்துகளும் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


























