தமிழகத்தில் பள்ளிகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை – ஆசிரியர்கள், பெற்றோர்கள் கோரிக்கை!
கொரோனா தொற்றுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு 6 நாட்கள் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிருப்தி அடைந்துள்ளதால் வேலை நாளை 5 நாளாக குறைக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 நாட்கள் விடுமுறை:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகரித்து கொண்டிருந்த காரணத்தால் பள்ளி கல்லூரிகள் எதுவும் திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது. இதுமட்டுமல்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளுமே மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தாண்டு கண்டிப்பாக மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்பில் சரியாக மாணவர்களுக்கு பாடம் கற்பிக்காததால் தற்போது விறுவிறுப்பாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகள் வைத்து பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. ஒரு சிறிய இடைவெளி கூட இல்லாமல் தொடர்ந்து பாடம் நடத்தி கொண்டிருப்பதால் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் ஆசிரியர்களும் அவர்களின் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியவதில்லை என வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமல்லாமல், மாணவர்கள் பள்ளி முடிந்து 6 மணிக்கு தான் வீடு திரும்புகின்றனர். வாரத்தில் ஆறு நாளும் இப்படி ஓடிக் கொண்டிருப்பதால் பெற்றோர்களுக்கும் மன அழுத்தத்தை கொடுத்துள்ளது. கொரோனா காலத்தில் பள்ளிகள் திறக்காததை காரணம் காட்டி தமிழக அரசு 6 நாள் வேலைநாளாக அறிவித்தது அதிருப்தியை அளிக்கிறது. இதனால் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டும் வேலைநாளாக அறிவிக்கும்படி பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.