TNEB தமிழக மின்வாரியத்தில் 2400 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு ரத்து – முக்கிய கோரிக்கை!
தமிழக மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகளாகியும் தற்போது வரைக்கும் தேர்வு நடைபெறவில்லை. இதனால் தேர்வாளர்கள் தேர்வு கட்டணத்தை உடனடியாக திருப்பி வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
மின்வாரிய தேர்வு:
தமிழக மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்டிருந்தது. மேலும் கிட்டத்தட்ட 600 உதவி பொறியாளர்கள், 1300 கணக்கிட்டார்கள், மற்றும் 500 இளநிலை உதவியாளர் கணக்கு ஆகிய பதவிகளுக்கு ஆட்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. உதவி பொறியாளர் பணிக்கு 600 காலியிடங்களுக்கு கிட்டத்தட்ட 19,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். 1300 கணக்கீட்டாளர் பதவிக்கு கிட்டத்தட்ட 32 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். மேலும் இளநிலை உதவியாளர் கணக்கு 500 காலிப்பணியிடங்களுக்கு கிட்டத்தட்ட 1.3 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
அனைத்து விண்ணப்பங்களும் பெறப்பட்ட பிறகு தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி விட்டது. இதைத்தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல், ஆட்சி மாற்றம், கொரோனா இரண்டாம் அலை, மூன்றாம் அலை காரணமாக தமிழக மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மேலும், திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தமிழக மின்வாரியம் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், தற்போது வரைக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எந்த தேர்வையும் மின்வாரியம் வெளியிடவில்லை. மேலும் இந்த விண்ணப்பங்களை விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள் அதாவது பொதுபிரிவினர் ரூபாய் 1000, எஸ்சி., எஸ்டி., பிரிவினர் ரூபாய் 500 செலுத்தியுள்ளனர். இதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் தற்போது வரைக்கும் தேர்வு நடக்காததால் தேர்வுக் கட்டணமாக செலுத்தப்பட்ட தொகையை அரசு வட்டியுடன் சேர்த்து திருப்பி தரவேண்டுமென மின்வாரியத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.